ஜனன, மரண காலத்தில் இன்னின்ன பேருக்கு இன்னின்ன விதமான தீட்டு வரும் என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. பொதுவாக, உலகம் முழுவதுமே ஒரு சம்பந்தத்தில் உள்ளது. அதிலும் குறிப்பாக, ஒரு பரம்பரையோ, உறவுகளோ, ஒரு குறிப்பிட்ட தலைமுறை வரை சம்பந்தத்தில் இருப்பதாக சாஸ்திரம் சொல்கிறது. அண்மைக் காலத்தில் இந்த சம்பந்தம் குறித்து, அறிவியல் ரீதியான மரபு ஆராய்ச்சியில் நிரூபித்திருக்கிறார்கள். உறவுமுறையில் ஒருவர் காலமானால், நம் சாஸ்திரங்களில் பத்து நாள் தீட்டு, மூன்று நாள் தீட்டு, ஒன்றரை நாள் தீட்டு, ஸ்னானம் மட்டும் போதும் என்று நான்கு வகையாகப் பிரித்திருக்கிறார்கள். சாஸ்திரம் என்ன சொல்கிறதோ அதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். தஸ்மாத் சாஸ்த்ரம் ப்ரமாணந்தே கார்யா கார்ய வ்யவஸ்திதௌ இதைச் செய்யலாம்; இதைச் செய்யக் கூடாது என்பதற்கு சாஸ்திரம்தான் பிரமாணமே தவிர நம் புத்தியோ யுக்தியோ பிரமாணம் ஆகாது.