தென்னாடுடைய சிவனே போற்றி என்ற மாணிக்கவாசகரின் வரிகளுக்கேற்ப, தமிழகத்தில் உள்ள சிவன்கோயில்கள் எண்ணிலடங்காதவை. திராவிட தேசத்தில் அநேக இடங்களில் பழமையான சிவன்கோயில்கள் கலைநயத்தோடும் அருள் திறத்தோடும் மன்னர்காலப் பொக்கிஷங்களாகத் திகழ்கின்றன. அவ்வகையில் திருவண்ணாமலை மாவட்டம், விண்ணமங்கலத்தில் உள்ள கயிலாசநாதர் கோயிலும் ஒன்று. சம்புவராய மன்னர்களால் ஆளப்பட்டதன் காரணமாகவே இம்மாவட்டம் முன்பு திருவண்ணாமலை சம்புவராயர் மாவட்டம் என்று அழைக்கப்பட்டது. இந்தக் கயிலாசநாதர் கோயிலும் சம்புவராயர்களே கட்டியிருக்கக்கூடும் என்பது ஆய்வாளர்களின் கணிப்பு. அதற்குச் சான்றாக பிறைநிலவுடன் கூடிய காளைச் சின்னம் கோயில் விதானத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. குறுநில மன்னர்களான சம்புவராயர்களின் கலைத்திறன் இக்கோயில் முழுக்க ஆங்காங்கே பிரதிபலித்திருக்கிறது. இக்கோயில் நந்திதேவரின் சிலை வர்ணிக்க இயலாத அளவுக்கு எழிலானது.
கணபதி, சண்முகர், பைரவர், வீரபத்திரர் சிற்பங்களும் கலையம்சத்துடன் திகழ்கின்றன. பைரவர் வித்தியாசமாக இரண்டு கரங்களை மட்டுமே கொண்டு நாய் வாகனத்தின் மீது கையூன்றிய நிலையில் அற்புதமாகக் காட்சியளிக்கின்றார். கருவறையில் இறைவன் லிங்கத் திருமேனியராகத் திகழ, அம்பிகை நின்ற திருக்கோலத்தின் தனி சன்னதியில் தரிசனம் தருகிறாள். இத்தலம் வந்த சிவபெருமானை தரிசிப்பது, கயிலை சென்று வணங்கிய பலனைத் தரும் என்பதால், இறைவனுக்குக் கயிலாசநாதர் என்ற பெயர் அமைந்தது என்கிறார்கள் இத்தலத்தில் பலகாலமாக வாழும் முதியவர்கள். ஒரு பிராகாரத்தை உடைய இக்கோயில் அன்று எத்தனை பெருமையுடன் விளங்கியதோ, இன்று கவனிப்பார் இன்றிக் களையிழந்து காணப்படுகிறது. விமானம் சரிந்து, பல சன்னிதிகளில் மண்புற்றுகள் வளர்ந்து, சீரமைக்க வேண்டிய கட்டாய நிலையில் அடியவர் பலரின் முயற்சியால் தற்போது திருப்பணி தொடங்கப்பட்டுள்ளது.