பதிவு செய்த நாள்
15
ஏப்
2017
12:04
தமிழ் புத்தாண்டையொட்டி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களிலும் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை தரிசித்தனர். திருத்தணி முருகன் கோவிலில், தமிழ் புத்தாண்டையை ஒட்டி நேற்று முன்தினம் இரவு முழுவதும், கோவில் நடை திறக்கப்பட்டிருந்தது. மலைக்கோவிலில் பக்தி கச்சேரி நிகழ்ச்சி நடந்தது. மேலும், நள்ளிரவு, 12:01 மணிக்கு மூலவருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தங்கவேல், தங்க கிரீடம், பச்சை மாணிக்க கல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடந்தது.
நந்தி ஆற்றின் கரையோரம் உள்ள, கோட்ட ஆறுமுக சுவாமி கோவிலில் இருந்து, 1,008 பால்குட ஊர்வலம் துவங்கி, மலை கோவிலில் உள்ள, காவடி மண்டபத்தில் நிறைவடைந்தது. பால்குட ஊர்வலத்தை, கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் சிவாஜி, அரக்கோணம் எம்.பி., அரி, திருத்தணி எம்.எல்.ஏ., நரசிம்மன் ஆகியோர் துவக்கி வைத்தனர். மலை கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, பொது வழியில், மூன்று மணி நேரம், நீண்ட வரிசையில் காத்திருந்து, மூலவரை வழிபட்டனர். அதே போல், திருத்தணி முருகன் கோவிலின், உபகோவிலான மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவில், மத்தூர் கிராமத்தில் உள்ளது.
இந்த அம்மனுக்கு, 24ம் ஆண்டு, 1,008 பால்குட ஊர்வலம் நேற்று நடந்தது. பக்தர்கள், அலகு குத்தி, தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். ஊத்துக்கோட்டை சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில், வால்மிகீஸ்வரர் சன்னிதியில் சிறப்பு பூஜை நடந்தது. இதேபோல், மரகதாம்பிகை தாயார், தாம்பத்ய தட்சணாமூர்த்தி உள்ளிட்ட தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். கும்மிடிப்பூண்டி மற்றும் ஆர்.கே.பேட்டை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள முக்கிய கோவில்களில் சிறப்பு தீபாராதனைகள் காட்டப்பட்டன. திரளான பக்தர்கள், பால்குடங்களை ஊர்வலமாக கொண்டு சென்றனர். மாடவீதியில் ஆறாக ஓடிய பால் உற்சவர் முருகப்பெருமானுக்கு காவடி மண்டபத்தில், 1,008 பால்குட அபிஷேகம் நடந்தது. பால் வெளியேற தனி குழாய் உள்ளது. குழாய் உடைந்திருந்ததால், பால், கோவில் மாட வீதியில் வெளியேறி, ஆறாக ஓடியது. சுவாமிக்கு அபிஷேகம் செய்த பால் என்பதால், பக்தர்கள் அதைமிதிக்காமல் செல்ல, சிரமப்பட்டனர்.