பதிவு செய்த நாள்
19
ஏப்
2017
01:04
பொன்னேரி: பிரம்மோற்வச விழாவில், ஹரிகிருஷ்ண பெருமாள், தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.பொன்னேரி, சவுந்தர்ய வள்ளி தாயார் சமேத ஹரிகிருஷ்ண பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவில், நேற்று, தேரோட்டம் நடந்தது. பல வண்ணங்களில் பூக்கள் மற்றும் துணிகளால் அலங்கரிக்கப்பட்ட, தேரில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் உற்சவ பெருமான், ஹரிகிருஷ்ண பெருமாள் வீற்றிருந்தார். காலை, 9:00 மணிக்கு, நிலையிலிருந்து புறப்பட்ட தேர், புதிய தேரடி தெரு, தாயுமான் செட்டி தெரு, நீலி அப்பாதுரை தெரு, தண்டபாணி தெரு ஆகிய மாட வீதிகளின் வழியாக வலம் வந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், தேர் திருவிழாவில் திரளாக பங்கேற்று தேரினை வடம் பிடித்து இழுத்து பெருமானை நெஞ்சுருக வழிபட்டனர்.தேர் திருவிழாவின்போது, வியாபாரிகள், மகளிர் சுயஉதவி குழுக்கள் சார்பாக, ஆங்காங்கே அன்னதானம் மற்றும் நீராகாரங்கள் வழங்கப்பட்டன. பொன்னேரி மின்வாரிய ஊழியர்கள் தேர் செல்லும் பாதையின் குறுக்கே இருந்த மின் கம்பிகளை அகற்றுவதிலும், பொன்னேரி காவல் துறையினர் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர். பொன்னேரி தீயணைப்பு மீட்பு துறையினர் தயார் நிலையில் இருந்தனர்.