பதிவு செய்த நாள்
26
ஏப்
2017
12:04
உளுந்துார்பேட்டை: கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை பெரு விழாவையெொட்டி, சாகை வார்த்தல் நடந்தது. உளுந்துார்பேட்டை அடுத்த கூவாகம் கிராமத்தில் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை பெரு விழா நேற்று துவங்கியது. அதனையொட்டி மாலை 5.15 மணிக்கு சாகை வார்த்தல் நடந்தது. இதையொட்டி கூவாகம், கூவாகம் காலனி, தொட்டி, நத்தம், அண்ணாநகர், சிவலிங்குளம், பாரதிநகர் உள்ளிட்ட 7 கிராமங்களில் இருந்து பெண்கள் கஞ்சி கலயங்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின், கோவிலில் வைத்து ஸ்ரீமாரியம்மனுக்கு படையலிட்டு, சுவாமிக்கு தீபாரதனை செய்தனர்.
இன்று(26ம் தேதி) பந்தலடியில் ஊர் பிரமுகர்களுக்கு தாலி கட்டும் நிகழ்ச்சியும், 27 ம் தேதி சந்தனு சரிதம், 28 ம் தேதி பீஷ்மர் பிறப்பு, 29ம் தேதி தர்மர் பிறப்பு, 30ம் தேதி பாஞ்சாலி பிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கிறது. அதனை தொடர்ந்து 1ம் தேதி பகாசூரன் வதம், 2ம் தேதி பாஞ்சாலி திருமணம், 3ம் தேதி கூத்தாண்டவர் பிறப்பு, 4ம் தேதி ராஜசூய யாகம் நிகழ்ச்சிகளும், 5ம் தேதி வெள்ளிக்கால் நடுதல், 6ம் தேதி கிருஷ்ணன் துாது, 7 ம் தேதி கூத்தாண்டவருக்கு பாலாலயம், 8 ம் தேதி கம்பம் நிறுத்துதல் நிகழ்ச்சிகள் நடக்கிறது. முக்கிய திருவிழாவாக 9ம் தேதி இரவு சுவாமிக்கு திருக்கண் திறப்பு நடக்கிறது. மறுநாள் காலை தேரோட்டம் நடக்கிறது. தொடர்ந்து 12ம் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவடைகிறது.