பதிவு செய்த நாள்
11
மே
2017
02:05
முகையூர் : முகையூர், கள்ளழக பெருமாள், பாலாற்றில் இறங்கிய உற்சவம், நேற்று கோலாகலமாக நடந்தது. கூவத்துார் அடுத்த, முகையூரில், சுந்தரவல்லி தாயார் சமேத கள்ளழக பெருமாள் கோவில் அமைந்து, வட திருமாலிருஞ்சோலை கோவிலாக விளங்குகிறது. இக்கோவிலின் கள்ளழக பெருமாள், ஆண்டுதோறும் சித்திரை பவுர்ணமி நாளில், பாலாற்றில் இறங்கும் உற்சவம், நேற்று நடந்தது. இதை முன்னிட்டு, அதிகாலை, சுவாமிக்கு மலர் அலங்காரத்துடன், சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, சுவாமி, குதிரை வாகனத்தில் எழுந்தருளி, பஜனை பாடல்கள் முழக்கத்துடன், கோவிலிலிருந்து புறப்பட்டு, கூவத்துார், ஆதிகேசவ பெருமாள் கோவில் சென்றார். இங்கு, ஆண்டாள் சூடிய மாலை வழங்கப்பட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது. காலை, 8:00 மணிக்கு, வாயலுார் பாலாற்றை அடைந்தார். ஆற்றில், சுவாமிக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டு, ஆண்டாள் அளித்த மாலை சூடி, வேதபாராயணம், மங்கல இசை முழங்க, காலை 9:45 மணிக்கு, சுவாமி, ஆற்றில் இறங்கி கடந்தார். பக்தர்கள், கோவிந்தா... கோவிந்தா... என முழங்கி, வேப்பஞ்சேரி, கூவத்துார் பகுதிகள் வழியே, தொடர்ந்து செல்ல, சுவாமி கோவிலை அடைந்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.