திருப்புத்துார், திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் நடந்தது. குன்றக்குடி ஐந்து கோயில் தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் 10 நாட்கள் விழாவாக கொண்டாடப்படும் வைகாசி விசாகம், மே30ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
தொடர்ந்து தினசரி இரவில் வாகனங்களில் சுவாமியும் அம்பாளும் விநாயகர், சண்டிகேஸ்வரர், வள்ளி தெய்வானை சுப்பிரமணியருடன் திருவீதி உலா வருகின்றனர். நேற்று முன்தினம் திருத்தளிநாதருக்கு மந்திரநீர் முழுக்காட்டி தீபாராதனை நடந்தது.நேற்று காலை அம்மன் தவத்திற்கு எழுந்தருளினார். தொடர்ந்து பக்தர்கள் தென்மாப்பட்டு வேலாயுதசுவாமி மடத்திலிருந்து திருக்கல்யாணத்திற்கு சீர் எடுத்து வந்தனர். பாஸ்கர் குருக்கள், கணேஷ் குருக்கள், ரமேஷ் குருக்கள் ஆகியோர் தலைமையில் சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க, திருத்தளிநாதருக்கும் சிவகாமி அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடந்தது. தேவஸ்தான ஆதீனகர்த்தர் குன்றக்குடி பொன்னம்பல அடிகள் பங்கேற்றார். பக்தர்களுக்கு கல்யாண விருந்தும் வழங்கப்பட்டது. ஜூன் 5ல் காலை 7:00 மணிக்கு நடராஜர் திருவீதி உலாவும், இ ரவில் திருவீதி உலாவும் நடைபெறும்.