பதிவு செய்த நாள்
03
ஜூன்
2017
11:06
ஆர்.கே.பேட்டை:பாண்டவர்களின் வெற்றிக்காக, தன் உயிரை விட துணிந்த அரவான், வினோதமான கோரிக்கைகளை முன்வைத்தார். கிருஷ்ண பரமாத்மா அவற்றை சாமர்த்தியமாக நிறைவேற்றினார். மகாபாரதத்தில், வனவாசம் மற்றும் அஞ்ஞாத வாசம் முடித்து நாடு திரும்பிய பாண்டவர்களிடம் நாட்டை ஒப்படைக்க துரியோதனன் மறுக்கிறார். இதையடுத்து, இருதரப்பினருக்கும் போர் நடக்கும் சூழல் உருவாகிறது. சண்டையை துவக்குவதற்கான நல்ல நாளை சகாதேவன் குறித்து கொடுக்கிறார்.
குரு ஷேத்திர போர்: போரில் வெற்றி கிடைக்க என்ன செய்ய வேண்டும் என தர்மராஜா, தம்பி சகாதேவனிடம் ஆலோசனை செய்கிறார். அதில், சர்வ லட்சணம் பொருந்திய ஒரு ஆண்மகனை, காளிக்கு பலி கொடுத்தால், வெற்றி நிச்சயம் என, சகாதேவன் தெரிவிக்கிறார். யார் அந்த ஆண்மகன் என, கிருஷ்ணர் யோசித்து பார்த்ததில், இருவர் நினைவுக்கு வருகின்றனர். ஒன்று அர்ச்சுனர், மற்றொன்று அர்ச்சுனன் மகன் அரவான். அர்ச்சுனனை வைத்து தான் குரு ஷேத்திர போரில் வெற்றி பெறவேண்டியுள்ளது. அதனால், அரவானை பலி கொடுப்பது என்ற முடிவு எட்டப்படுகிறது. இது குறித்து அரவானிடம் தெரிவிக்கின்றனர். போரில் வெற்றி பெற தான் பலியிடப்படுவதற்கு அரவான் சில நிபந்தனைகளை கிருஷ்ணரிடம் தெரிவிக்கிறார். ஒன்று தான் ஒரு பெண்ணை திருமணம் செய்து, ஒரு நாளேனும் இல்லற வாழ்க்கை நடத்த வேண்டும். மற்றொன்று, குரு ஷேத்திர போர் நடப்பதை தான் இறந்த பின்னும், தன்னுடைய கண்களால், அதை நேரடியாக பார்த்து ரசிக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கிறார். இரண்டாவது நிபந்தனையில் எந்த பிரச்னையும் இல்லை. சுலபமாக நடத்தி விடலாம் என கிருஷ்ணர் சொல்கிறார். ஆனால், திருமணம் முடிந்த மறுதினமே பலியாகப்போகும் ஒருவனை மணக்க, எந்த பெண் முன்வருவாள் என்பதே பெரும் சிக்கல். அதற்கு யாரும் முன்வராத நிலையில், கிருஷ்ணரே மோகினி அவதாரம் எடுத்து அரவானை மணக்கிறார்.
ஒரு நாள் மோகினியுடன் வாழ்ந்த அரவான் மறுநாள் கள பலிக்கு மகிழ்ச்சியாக தயாராகிறார். அரவான் கள பலியாக கொடுக்கப்பட்டதும், மோகினி, விதவைக்கோலம் பூணுகிறார். அரவானின் தலை மட்டும் குரு ஷேத்திர போர்க்களத்தில், சண்டையை காண ஏதுமாக உயரமான துாணின் மீது வைக்கப்படுகிறது. 18 நாட்கள் நடக்கும் சண்டையை, திறந்த நிலையில் உயிர்ப்புடன் உள்ள அவரது கண்கள், அந்த காட்சியை முழுமையாக பார்த்து மகிழ்கின்றன.
பிரம்மாண்ட சிலை: ஆர்.கே.பேட்டை அடுத்த செல்லாத்துாரில் நடந்து வரும் தீமிதி திருவிழாவில், நேற்று காலை அரவான் கள பலி நிகழ்ச்சி நடந்தது.
காலை, 6:00 மணிக்கு, கோவில் வளாகத்தில் பிரம்மாண்டமான அரவான் சிலை முன்பாக, தெருக்கூத்து கலைஞர்கள் கள பலி நிகழ்ச்சியை நடத்தினர். கள பலிக்கு பின், மோகினி ஒப்பாரி வைக்கும் நிகழ்ச்சியும், அரவானின் தலை துாணின் மீது வைக்கப்பட்ட நிகழ்ச்சியும் நடந்தது. நாளை, 18ம் நாள் போர்க்கள நிகழ்வில், துரியோதனனை பீமசேனன் கொல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. மாலையில் தீமிதி திருவிழா நடைபெறும்.