இறைவன் நமக்கு எல்லா செல்வமும் கொடுத்திருக்கும் பட்சத்தில் கஞ்சத்தனம் செய்தால், அது அவனுக்கு பிடிப்பதில்லை என்கிறார் நபிகள் நாயகம். ஒருமுறை நாயகத்தை அவரது பணக்கார நண்பர் பார்க்கச் சென்றார். அவர் தரம் குறைந்த ஆடைகளை அணிந்திருந்தார். நாயகம் அவரிடம், நீர் பணக்காரர் தானே? என்றார். ஆம்! அல்லாஹ் எனக்கு ஆடுகள், பசுக்கள், ஒட்டகங்கள் என ஏராளமான செல்வம் தந்துள்ளான், என்றார். உடனே நாயகம், அல்லாஹ் உமக்கு இவ்வளவு செல்வங்களைக் கொடுத்திருந்தால், அவரது அருளின் அடையாளம் உமது உடலில் வெளிப்பட்டிருக்க வேண்டும், என்றார். அதாவது, இறைவன் பொருளை வாரி வழங்கியிருக்கிறான் என்றால், அதை அனுபவிக்கவும் தெரிய வேண்டும். கஞ்சத்தனமாக சேர்த்து வைப்பது, நமக்கு இறைவன் செய்த நன்றியை மறப்பதாகும்.