பதிவு செய்த நாள்
29
ஜூன்
2017
12:06
புள்ளலூர்: பல்லவர் கால ராமர் கோவில் இடிந்து விழுந்ததால், புள்ளலூர் கிராமவாசிகள் கவலை அடை ந்துள்ளனர். வாலாஜாபாத் ஒன்றியம், புள்ளலூர் கிராமத்தில், பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட கோதண்டராமர் கோவில் உள்ளது. இக்கோவில், சுண்ணாம்பு கலவையால் கட்டப்பட்ட , செங்கல்கோபுரம் உடையகோவில். இந்த கோவில், சுண்ணாம்பு பூச்சு பூசப்படாமல் உள்ளது. இருப்பினும், கோவில் உட்புறச்சுவரில் கலை நயமிக்க ஓவியம் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த ஓவியமும் சிதைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், சில தினங்களுக்கு முன், கோபுரத்தின் முகப்பு பகுதியில், செங்கல் கட்டுமானம் சரிந்து விழுந்துள்ளது. வரலாற்று கோவில் என்பதால், இடிந்து விழுந்த கோபுர கற்களை அகற்றுவதில் கூட சிக்கல் இருப்பதாகவும், மேலும், ஆபத்தான கட்டடத்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர். எனவே , முழுமையாக இடிந்து விழும் அபாயத்தில் இருக்கும் கட்டடம் அருகே , தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.