திலீபன் சக்கரவர்த்தி ஏதோ ஒரு காரணத்தால் தனது செல்வங்களை இழக்க நேரிட்டது. அந்த சமயத்தில் வசிஷ்ட மகரிஷியின் ஆலோசனையின் பேரில் காமதேனுவையும், அதன் மகளான நந்தினிப் பசுவையும் பூஜித்து, அதற்கு சேவைசெய்து இழந்த செல்வங்களை மீண்டும் பெற்றான்.
திலீபன் சக்கரவர்த்தி நந்தினிப் பசுவை கண்ணை இமைகாப்பது போன்று காப்பாற்றி, அதற்கு சேவைகளைச் செய்தான் என சுருக்கமாக மகாகவி காளிதாசர் எழுதிய ரகுவசம் மூலம் தெரிந்துகொள்ளலாம். பசு நிற்கும்போது திலீபன் நிற்பாராம். அது தரையில் உட்காரும்போதுதான் உட்காருவாராம்; அது சாப்பிடும் போதுதான் சாப்பிடுவாராம்; அது ஓடும்போது அவரும் கூடவே ஓடுவாராம். இப்படியே அதன் பின்னால் நிழலாக இருந்து அதற்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்தாராம். அதாவது ஒரு சீடன் தனது குருவுக்கு எப்படிப் பணிவிடை செய்வானோ அப்படி திலீபன் சக்கரவர்த்தி நந்தினிப் பசுவுக்கு பணிவிடை செய்தான் என காளிதாசர் குறிப்பிட்டுள்ளார்.
எல்லா தேவதைகளும் காமதேனுவுக்குள் உறைந்திருப்பதுபோல, குருவிடமும் எல்லா தேவதைகளும் உள்ளனர். குருவை நாம் ஸர்வ தேவாத்ம ஸ்வரூபி எனச் சொல்வதுண்டு. குருவும் காமதேனுவும் ஒன்றே என்கிற உயர்வான சிந்தனையை நாம் வளர்த்துக் கொண்டால் எங்கும் எப்பொழுதும் மங்களமே!