பதிவு செய்த நாள்
18
ஜூலை
2017
04:07
மகாபாரதத்தில் விஷ்ணுவின் பெருமைகளும், வேதசாரமான கீதையும் சொல்லப்பட்டிருப்பதாலும், கண்ணன் பாரதக் கதையை மறைமுகமாய் நடத்துபவனாய் இருப்பதாலும் மகாபாரதம் முழுதும் விஷ்ணுவைப் பற்றி மட்டுமே கூறும் நூல் என்பது போன்று தோன்றும்! ஆனால், அதே மகாபாரதத்தில் சிவ ஸஹஸ்ரநாமமும் சொல்லப்பட்டிருக்கிறது என்பது பலருக்குத் தெரியாத உண்மை! இந்த சிவ ஸஹஸ்ரநாமத்தைத் தண்டி முனிவர் சுக்ரருக்கு உபதேசித்தார். சுக்ரர் கவுதமருக்கும், கவுதமர் வைவஸ்வத மனுவுக்கும், அவர் நாராயண மனுவுக்கும், அவர் தர்ம தேவதைக்கும் சொன்னார். தர்மதேவதை யமனுக்கும், யமன் நசிகேதனுக்கும், அவர் மார்கண்டேயருக்கும், அவர் கிருஷ்ண பகவானுக்கும் உபதேசித்தார், கிருஷ்ணர் யுதிஷ்டிரனுக்கு உபதேசித்தார் என்பது புராணம். கீதையை அர்ஜுனனுக்கும், சிவ ஸஹஸ்ர நாமத்தை தருமருக்கும் உபதேசித்தார் கிருஷ்ணர். ஆக, சிவ ஸஹஸ்ரநாமம், கிருஷ்ணனாலேயே உபதேசிக்கப்பட்டிருக்கிறது. இதுவும் தெய்வம் மனிதனுக்குச் சொன்னதாகிறது. யார் ஒருவர் பிரம்மசரிய விரதமிருந்து ஓர் ஆண்டு காலம் பக்தியுடன் சிவ ஸஹஸ்ரநாமம் படிக்கிறாரோ அவர், அசுவமேத யாகப் பலனை அடைவர் என்று சொல்லப்பட்டிருக்கிறது. காஷ்மீரத்தில் கிருஷ்ணனை சைவராகவே பண்டிதர்கள் மதிக்கிறார்கள். கீதையும் அத்வைத நூலாகவே கருதப்படுகிறது என்பதும் விசேஷம்.