பதிவு செய்த நாள்
14
ஆக
2017
12:08
ஆர்.கே.பேட்டை: ஆடி மாத உற்சவம் இறுதி கட்டத்தை எட்டிய நிலையில், நேற்று, வெள்ளாத்துாரம்மனுக்கு, 1,008 லிட்டர் பாலாபிஷேகம் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஆடி மாதம் துவங்கியதில் இருந்து, அம்மன் கோவில்களில், சிறப்பு உற்சவங்கள் களைகட்டின. குறிப்பாக, ஆடி அமாவாசை, பவுர்ணமி மற்றும் மூன்றாம் வெள்ளிக்கிழமையில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டது. ஆர்.கே.பேட்டை சுற்றுப்பகுதி அம்மன் கோவில்களில், ஒரு மாதமாக பல உற்சவங்கள் நடைபெற்று வரும் நிலையில், நேற்று, வெள்ளாத்துாரம்மன் கோவிலில், மூலவருக்கு, 1,008 லிட்டர் பாலாபிஷேகம் செய்யப்பட்டது. காலை, 10:00 மணிக்கு துவங்கிய பால் குடம் ஊர்வலம், பகல், 12:00 மணிக்கு கோவில் வளாகத்தை வந்தடைந்தது. பாலாபிஷேகம் முடிந்த பின், மலர் அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தர். பக்தர்கள் பொங்கலிட்டனர். ஆர்.கே.பேட்டை, வங்கனுார், மத்துார், புச்சிரெட்டிபள்ளி, பொதட்டூர்பேட்டை, ஸ்ரீகாளிகாபுரம், அம்மையார்குப்பம், சொரக்காய்பேட்டை, நல்லவானம்பேட்டை மற்றும் ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், நேற்று அம்மனை தரிசித்தனர். நாளை ஆடி கிருத்திகை விழா என்பதால், அம்மனுக்கான ஆடி உற்சவம், உச்சகட்டத்தை எட்டியுள்ளது.