பதிவு செய்த நாள்
23
ஆக
2017
10:08
நாகப்பட்டினம்: அதிபத்த நாயனாருக்கு, சிவபெருமான் காட்சிஅளித்ததை நினைவுக்கூரும் வகையில், கடலில் தங்க மீன் விடும் வைபவம் நேற்று நடந்தது. பண்டைய காலத்தில், நாகை, நம்பியார் நகர் மீனவ கிராமத்தில் பிறந்தவர், அதிபத்தர். சிவன் மீதுள்ள பக்தியால், கடலில் மீன் பிடிக்கச் செல்லும் போது, ஒவ்வொரு நாளும், வலையில் சிக்கும் முதல் மீனை, சிவனை நினைத்து, கடலில் விடுவது அதிபத்தரின் வழக்கம்.
திருவிளையாடல் : அதிபத்தரின் பக்தியை சோதிக்க விரும்பிய சிவன், சில நாட்கள், அதிபத்தரின் வலையில் மீன்கள் சிக்காமல் இருக்குமாறு செய்தார். இதனால், அவரது குடும்பம் வறுமையில் வாடியது. அதன்பின், அதிபத்தரின் வலையில், நாள்தோறும், ஒரே ஒரு மீன் மட்டுமே கிடைக்கும் படி, சிவன் திருவிளையாடல் செய்துள்ளார். வறுமையில் வாடிய நிலையிலும், வலையில் சிக்கும் ஒரு மீனையும், வழக்கம் போல இறைவனை நினைத்து, கடலில் விட்டு, வெறுங்கையுடன் வீட்டிற்கு திரும்புவதை வாடிக்கையாக கொண்டார். உணவின்றி குடும்பத்தினர் வறுமையில் வாடிய நிலையில், ஒருநாள், அதிபத்தரின் வலையில், நவரத்தினங்களால் ஆன, தங்க மீன் சிக்கியுள்ளது. தங்க மீனாயினும் தயங்காது, இது, அருட்கூத்தாடும் எம்பெருமான் சிவனுக்கு உரியது என, மகிழ்வோடு கடலில் விட்டுள்ளார்.
வரவேற்பு : அதிபத்தரின் தீவிர பக்தியை மெச்சிய சிவன், நடுக்கடலில், ரிஷப வாகனத்தில் தேவியருடன் எழுந்தருளி, அதிபத்தருக்கு காட்சியளித்தார். இதையடுத்து, 63 நாயன்மார்களில் ஒருவராக, அதிபத்தர் போற்றப்படுகிறார். அதிபத்த நாயனாருக்கு, சிவன் காட்சியளித்த தினத்தை நினைவுக்கூரும் வைபவம், நாகையில் நேற்று நடந்தது. நீலாயதாட்சி அம்மன் கோவிலில், ரிஷப வாகனத்தில் சிவன், தேவியருடன் எழுந்தருளினார். நம்பியார் நகர் மீனவ கிராம மக்கள், மேள தாளம், மங்கள வாத்தியங்கள் முழங்க, சிவனையும், அதிபத்த நாயனாரையும், நாகை கடற்கரைக்கு அழைத்து சென்றனர். புதிய கடற்கரையில், ஆரியநாட்டுத் தெரு கிராம மீனவர்கள், சீர்வரிசையுடன் வரவேற்றனர். சிவன் மற்றும் அதிபத்த நாயனாருக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, அதிபத்த நாயனார், பைபர் படகில் சென்று, கடலில் தங்க மீன் விடும் வைபவம் நடந்தது. திரளான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.