உங்களுக்கு ஏழரை, அஷ்டம, அர்த்தாஷ்டம, கண்டகச்சனி நடக்கிறதா! புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சனீஸ்வரர் சன்னதி முன் அமர்ந்து இந்த சனீஸ்வரர் கவசத்தை வாசித்தால், அவர் மகிழ்ந்து அருள்புரிவார்.
கருநிறக் காகம் ஏறி காசினி தன்னைக் காக்கும் ஒரு பெரும் கிரகமான ஒப்பற்ற சனீஸ்வரா! உந்தன் அருள் கேட்டு வணங்குகின்றேன்! ஆதரித்து எம்மைக் காப்பாய்! பொருளோடு பொன்னை அள்ளி பூவுலகில் எமக்குத் தாராய்!
ஏழரைச் சனியாய் வந்தும் எட்டினில் இடம் பிடித்தும் கோளாறு நான்கில் தந்தும் கொண்டதோர் கண்ட கத்தில் ஏழினில் நின்ற போதும் இன்னல்கள் தாரா வண்ணம் ஞாலத்தில் எம்மைக் காக்க நம்பியே தொழுகின்றேன் நான்!
பன்னிரு ராசி கட்கும் பாரினில் நன்மை கிட்ட எண்ணிய எண்ணம் எல்லாம் ஈடேறி வழிகள் காட்ட எண்ணெய்யில் குளிக்கும் நல்ல ஈசனே உனைத் துதித்தேன்! புண்ணியம் எனக்கு தந்தே புகழ் கூட்ட வேண்டும் நீயே!
கருப்பினில் ஆடை ஏற்றாய் காகத்தில் ஏறி நின்றாய் இரும்பினை உலோகமாக்கி எள் தனில் பிரியம் வைத்தாய்! அரும்பினில் நீல வண்ணம் அணிவித்தால் மகிழ்ச்சி கொள்வாய் பெரும் பொருள் வழங்கும் ஈசா பேரருள் தருக நீயே!
சனியென்னும் கிழமை கொண்டாய் சங்கடம் விலக வைப்பாய்! அணிதிகழ் அனுஷம், பூசம் ஆன்றோர் உத்திரட்டாதி இனிதே உன் விண்மீனாகும் எழில் நீலா மனைவியாவாள்! பணியாக உனக்கு ஆண்டு பத்தொன்பது என்று சொல்வாய்!
குளிகனை மகனாய்ப் பெற்றாய் குறைகளை அகல வைப்பாய் எழிலான சூரியன் உன் இணையற்ற தந்தை யாவார்! விழி பார்த்து பிடித்துக் கொள்வாய் விநாயகர் அனுமன் தன்னைத் தொழுதாலோ விலகிச் செல்வாய் துணையாகி அருளைத் தாராய்!
அன்ன தானத்தின் மீது அளவிலா பிரியம் வைத்த மன்னா சனீஸ்வரா! உன்னை மனதாரப் போற்றுகின்றோம்! உன்னையே சரணடைந்தோம்! உயர்வெல்லாம் எமக்குத் தந்தே மன்னர் போல் வாழ்வதற்கே மணியான வழி வகுப்பாய்!
மந்தனாம் காரி நீலா மணியான மகர வாசா! தந்ததோர் கவசம் கேட்டே சனி என்னும் எங்கள் ஈசா! வந்திடும் துயரம் நீக்கு வாழ்வினை வசந்தம் ஆக்கு! எந்த நாள் வந்த போதும் இனிய நாள் ஆக மாற்று!