பதிவு செய்த நாள்
19
செப்
2017
11:09
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நளேஸ்வரர் சன்னதி விமான முகப்பு உடைந்து விழுந்ததால், பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், கடந்த பிப்., 6ல் நடந்தது. இதை முன்னிட்டு, அனைத்து சன்னதிகளும் புதுப்பிக்கப்பட்டது. இந்நிலையில், கோவில் வளாகத்தில் உள்ள பிரம்மதீர்த்தம், சிவகங்கை தீர்த்தம் தூர்வாரப்படாமலும், பணிகள் அனைத்தும், அவசர கதியில் செய்யப்பட்டதாக, பக்தர்களிடையே புகார் எழுந்தது. இந்நிலையில், நேற்று காலை கோவில் நடை திறக்கப்பட்டு, 5:30மணி அளவில், அருணாசலேஸ்வரர் கோவிலில் கோ பூஜைக்காக ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. அப்போது, பிரம்மதீர்த்தம் எதிரில் உள்ள நளேஸ்வரர் சன்னதியில், கருங்கல்லால் அமைக்கப்பட்டுள்ள அரை டன் எடை அளவு கொண்ட கருங்கல்லால் ஆன விமானத்தின் முகப்பு, திடீரென உடைந்து கீழே விழுந்தது. அப்போது பக்தர்கள் யாரும் அங்கு இல்லாததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விமான முகப்பு உடைந்து விழுந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.