பதிவு செய்த நாள்
19
செப்
2017
01:09
திருப்பூர், காங்கயம் ரோடு, காயத்ரி மஹாலில், சுந்தர காண்டம் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதில், “வாழ்வில் வரும் சோதனைகளை வென்றெடுக்க, மனச்சோர்வு இருக்கவே கூடாது; ஆஞ்சநேயரை நினைத்து தைரியத்தை வரவழைத்து கொள்ள வேண்டும்,” என, வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமி உபதேசித்தார்.
இரண்டாம் நாள் சொற்பொழிவில், அவர் பேசியதாவது: உலகில் உயிர்கள் வாழ பிராண வாயு எவ்வளவு முக்கியமோ? அந்த அளவுக்கு வாயு புத்திரனான ஆஞ்சநேயரின் அனுக்கிரஹமும் முக்கியமானது. தலைவனாக இருப்பவன், நல்ல மனிதர்களை மதித்து நடந்தால் நாடும், வீடும் சுபிட்ஷமாக இருக்கும். பெற்றோர் பெயர் விளங்கவும், மகனின் பெயரை பெருமையாக கூறும் அளவுக்கும், நற்பெயரை பெற்றிருக்க வேண்டும். ராமர் அப்படியானவராக இருந்தார். புண்ணிய யாத்திரை, சுவாமி தரிசனம், ஆன்மிக சொற்பொழிவு கேட்பது போன்ற இடங்களுக்கு தனியா ளாக செல்லக்கூடாது. மனைவியுடன் செல்ல வேண்டும். சீதையை தூக்கி செல்ல பயன்படுத்தப்பட்ட புஷ்பவிமானம், அனுமனின் பார்வை பட்ட பிறகு, நற்காரியங்களுக்கு மட்டுமே பயன்பட்டது. அதேபோல், ஆஞ்சநேயரின் பார்வை பட்டவர்கள் தவறான பாதைக்கு செல்ல மாட்டார்கள். தரையில் அமர்ந்துதான், உணவு சாப்பிட வேண்டும்.
சூரிய ஒளிபடும் இடமெல்லாம் தீட்டு இல்லாத இடமாக மாறிவிடுகிறது. பூமியில் இலை போட்டு உணவு சாப்பிடுவது, எத்தகைய பாவத்தையும் போக்கிவிடும். சந்தேக கேள்வி எழாத அளவுக்கு தூது அமைய வேண்டும்; ஆஞ்சநேயர் அப்படித்தான் இலங்கைக்கு சென்று வந்தார். உலகத்திலேயே, ஆஞ்சநேயரும், பீஷ்மர் மட்டுமே பிரம்மச்சரிய விரதத்தை சரியாக கடைபிடித்தவர்கள். இவர்கள், பெண்கள் வசப்படவில்லை. பெரிய பாத்திரத்தில் சிறிய ஓட்டை விழுந்தாலும், உள்ளே உள்ள அனைத்து நீரும் வீணாக வெளியேறும். அதுபோல், ஐம்புலன்களில் ஒன்று கெட்டாலும், மற்றதை கெடுத்துவிடும். ஐம்புலனை அடக்கும் வலிமை ஆஞ்சநேயருக்கு மட்டுமே இருக்கிறது. மனது குழப்பமாக இருந்தால், அதற்கான காரணத்தை முதலில் நாம் தெரிந்து கொண்டு தீர்வு பெற வேண்டும். மனதில் எவ்வளவு துன்பம் இருந்தாலும் சீதா ராமரை மனதில் வைத்து ஆராதித்தால், வளமான வாழ்வு அமையும்.
குடும்ப பெண்கள், தனது பிள்ளைகளை பக்தர்களாக வளர்க்க வேண்டியது, தலையாய கடமையாக இருக்கிறது. வாழ்வில் வரும் சோதனைகளை வென்றெடுக்க, மனசோர்வு இருக்கவே கூடாது; ஆஞ்சநேயரை நினைத்து தைரியத்தை வரவழைத்துக்கொள்ள வேண்டும். எந்தவொரு பணியாக இருந்தாலும் இறைவழிபாட்டுடன் துவக்க வேண்டும். இவ்வாறு, வேளுக்குடி கிருஷ்ணன் பேசினார்.