காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த தெப்போத்சவம் நேற்றுடன் நிறைவு பெற்றது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அனந்தசரஸ் தெப்ப குளத்தில் ஆண்டு தோறும், தை பவுர்ணமியன்று தெப்போத்சவம் துவங்கி, தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும். அதன்படி நடப்பு ஆண்டுக்கான முதல் நாள் தெப்போத்சவம் பிப்., 1ம் தேதி இரவு 7:00 மணிக்கு துவங்கியது. இதில், அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், பெருந்தேவி தாயார், ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியாருடன், வரத ராஜ பெருமாள் ‘அனந்தசரஸ்’ என அழைக்கப்படும் தெப்ப குளத்தில் எழுந்தருளி, மூன்று முறையும், இரண்டாம் நாளான நேற்று முன் தினம் ஐந்து முறையும், தெப்போத்சவம் நிறைவு நாளான நேற்று, ஏழு முறையும் தெப்பத்தில் உலா வந்தார். தெப்போத்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.