பதிவு செய்த நாள்
21
செப்
2017
10:09
திருப்பூர்: நவராத்திரி விழா இன்று துவங்கி, பத்து நாட்கள் நடைபெறுகிறது. புரட்டாசி மகாளய அமாவாசை அடுத்த, பிரதமை முதல் ஒன்பது நாட்கள், நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. முதல் மூன்று நாட்கள், அம்மனை பராசக்தியாகவும், அடுத்த மூன்று நாட்கள், லட்சுமியாகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் வழிபடுகின்றனர். உலக இயக்கத்திற்கு ஆதாரமான, மலைமகள், அலை மகள், கலைமகளை வழிபடும் தினமாகவும், ஒவ்வொரு நாளும் தேவியரை பல்வேறு வடிவங்களில், சுண்டல் உள்ளிட்ட நைவேந்தியங்கள் படைத்து, உறவுகள், நண்பர்களுடன், ஒன்பது நாளும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, வீடுகளில், ஒன்பது படிகளை கொண்ட கொலு அமைக்கப்படுகிறது. கோவில்களில் நவராத்திரி விழாக்கள் நடத்தப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள முக்கிய கோவில்களில், நவராத்திரியை முன்னிட்டு, கொலு வைக்கப்படுகிறது. பெருமாள் மற்றும் அம்மன் கோவிலில், தினமும் ஒரு அலங்காரம் என்ற வகையில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
ஸ்ரீ சாரதாம்பாள் கோவில்: திருப்பூர், அவிநாசி ரோடு, ஸ்ரீ சிருங்கேரி சங்கர மடம் ஸ்ரீ சாரதாம்பாள் கோவிலில், நவராத்திரி உற்சவ விழா நடந்து வருகிறது. விழாவை முன்னிட்டு, நேற்று காலை, அம்பாளுக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மகா மங்களஹாரதி நடந்தது. இன்று முதல், வரும், 29ம் தேதி வரை, தினமும் லட்சார்ச்சனை, வேத பாராயணம், தேவி மஹாத்மிய பாராயணம், நவாபரண பூஜை நடக்கிறது. தினமும் காலை, 11:30 மற்றும் இரவு, 8:30 மணிக்கு, மகா மங்களஹாரதி நடக்கிறது.