பதிவு செய்த நாள்
25
செப்
2017
01:09
திருச்சி: தி.மு.க., முன்னாள் அமைச்சர் நேரு, 4,500 அடி உயரத்தில் உள்ள பெருமாள் கோவிலில், சுவாமி கும்பிட்டு, பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். தி.மு.க., முக்கிய பிரமுகர்கள் பலரும், கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் என்றாலும், தலைமைக்கு பயந்து, அதை வெளியில் காட்டி கொள்வதில்லை.
திருச்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் நேரு, கோவில்களுக்கு செல்வது யாருக்கும் தெரியக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார். தற்போது, கோவிலுக்கு சென்றதை, பேஸ்புக்கில் படங்களுடன் பதிவேற்றம் செய்துள்ளார். திருச்சி மாவட்டம், தா.பேட்டை அருகேயுள்ள தலைமலை கிராமத்தில், 4,500 அடி உயர மலையில், தானா வளர்ந்த தலைமலை சஞ்சீவராய நல்லேந்திர பெருமாள் கோவில் உள்ளது. இதற்கு முறையான பாதை இல்லாமல், மலைப் பாதையில், 7 கி.மீ., ஏறி செல்ல வேண்டும். கோவிலை சுற்றி வர, மிகவும் குறுகலான, ஆபத்தான பாதை மட்டுமே உள்ளது. இந்த கோவிலுக்கு, 23ம் தேதி, கட்சி நிர்வாகிகள் சிலருடன் சென்ற நேரு, மலையில் ஏறியது, ஓய்வு எடுத்தது, சுவாமி கும்பிட்டது வரை, அனைத்தையும் படங்களாக எடுத்து, தன், பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மேலும், இந்த கோவிலில் சுவாமி கும்பிட வேண்டும் என்ற தன் நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளதாகவும், தெரிவித்துள்ளார்.