பதிவு செய்த நாள்
30
செப்
2017
03:09
சென்னை: சென்னையில் நவராத்திரி பூஜை முடிந்து, ஒன்பது நாட்கள் வழிபாடு நடத்தப்பட்ட, துர்காதேவி சிலைகள் கோலாகலமாக விழா எடுக்கப்பட்டு, கடலில் கரைக்கப்பட்டன. வடமாநிலங்களில் விநாயகர் சதுர்த்தியை போலவே, நவராத்திரி ஸ்பெஷலான துர்கா பூஜை கோலாகலமாக கொண்டாடப்படும். இவ்விரு நாட்களிலும், பூஜிக்கப்பட்ட சிலைகள் கடலில் கரைக்கப்படும்.
தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மற்றும் சிலை கரைப்பு நிகழ்ச்சிகள் ஆண்டுதோறும் நடந்து வருகின்றன. சென்னையில், விநாயகர் சதுர்த்தியைப் போல, நவராத்திரி ஸ்பெஷலான துர்கா பூஜையும், சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. வேப்பேரி, சவுகார்பேட்டை, எம்.கே.பி.நகர், கோபாலபுரம், அயனாவரம், தி.நகர் மற்றும் மேற்கு மாம்பலம் உள்ளிட்ட பல இடங்களில் துர்கா பூஜை வழிபாடு விமரிசையாக நடத்தப்பட்டுள்ளது. பல்வேறு அமைப்புகள் மற்றும் தனிநபர் சார்பில், சென்னையில் துர்கா பூஜை வழிபாடு சிறப்பாக நடந்தது. கடந்த ஒன்பது நாட்களாக கொண்டாடப்பட்டு வந்த, துர்கா பூஜையின் இறுதி நாளான, விஜயதசமியில் (செப் .30) வழிபாடு செய்யப்பட்ட சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன. ஊர்வலத்தில், இளைஞர்களும், சிறுவர்களும், வர்ணம்பூசி, உற்சாகத்துடன் நடனமாடியவாறே வந்தனர்.