பதிவு செய்த நாள்
03
அக்
2017
12:10
கோபி: கவுந்தப்பாடி அருகே, காந்தி கோவிலில், ஜெயந்தி விழா கோலாகலமாக நடந்தது.ஈரோடு மாவட்டம், பவானி தாலுகா, சலங்கபாளையம் கிராமம், செந்தாம்பாளையத்தில், காந்தி கோவில் உள்ளது. கடந்த, 1997 பிப்.,6ல் கும்பாஷேகம் நடந்தது. கையில் தடியுடன், கண்ணாடி அணிந்தபடி, ஐந்தடி உயரத்தில் காந்தி சிலை, இதன் எதிரே, அன்னை கஸ்தூரி பாய் சிலை உள்ளது. இங்கு ஆண்டுதோறும், குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ஆகிய மூன்று முக்கிய நாட்களில், சிறப்பு அபி?ஷகம் மற்றும் ஆராதனை நடக்கும். பிற நாட்களில் மூன்று காலை பூஜை நடக்கிறது. நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, காலை, 9:30 மணிக்கு, காந்தி சிலைக்கு, பால், தயிர், மஞ்சள், சந்தனம், திருமஞ்சனம், பன்னீர், இளநீர் மற்றும் புனிதநீர் ஊற்றி, மந்தரம் முழங்க அபிஷேக ஆராதனை நடந்தது. இதை தொடர்ந்து சிலைக்கு, கதர் வேட்டி, மூக்கு கண்ணாடி, அணிவிக்கப்பட்டது. கையில் தேசிய கொடி சொருகி, நெற்றியில் விபூதி, சந்தனம், குங்குமம் வைத்து அலங்கரிக்கப்பட்டது. இதேபோல் கஸ்தூரி பாய் சிலைக்கும், அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில் கவுந்தப்பாடி சுற்றுவட்டார பகுதி, பள்ளி மாணவர்கள், மக்கள் பங்கேற்றனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும், அன்னதானம் வழங்கப்பட்டது.