பதிவு செய்த நாள்
04
அக்
2017
12:10
திருப்பத்துார்: திருப்பத்துார் அருகே, 1,300 ஆண்டுகள் பழமையான, நடுகல் கோட்டம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வேலுார் மாவட்டம், திருப்பத்துார் துாயநெஞ்சக் கல்லுாரி தமிழ்த்துறை பேராசிரியர்கள் பிரபு, சிவசந்திரகுமார், தொல்லியல் துறை ஆர்வலர் முத்தமிழ் ஆகியோர், திருப்பத்துார் அடுத்த சந்தகிராபுரம் அடுத்த ஏரிக்கோடி கிராமத்தில், களப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்திரபுரம் ஏரியின் தென்புறம் அருகே, ஏரிக்கோடி என்ற இடத்தில், 1,300 ஆண்டுகள் பழமையான நடுகல் கோட்டத்தை கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: ஏரிக்கோடியில் கண்டுபிடிக்கப்பட்ட நடுகல், பத்து அடி நீளம், பத்து அடி அகலம் கொண்டது. சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய நடுகல்லில், எட்டு நிகழ்வுகளை சுட்டிக்காட்டும் விதமாக, 25 மனித உருவங்கள், ஐந்து குதிரைகள் உள்ளன. கல்லின் மையத்தில், தலைவனின் உருவம் பெரியதாக உள்ளது. தலைவனின் இடையில், கச்சையுடன், வாளின் உறையிடம் பெற்றுள்ளது. கழுத்தில், இரண்டு சங்கிலி, கால்களில் வீரக்கழல், கை மற்றும் தோள்பட்டையில் காப்பு, காதுகளில் காதணியம் அணிந்துள்ளான். வலது கரத்தில் பெரிய போர்வாளை ஏந்தியுள்ளான். போர்க்களத்தில் இந்த வீரன் எப்படி இறந்தான் என்பது, நடுகல்லில் விவரிக்கப்பட்டுள்ளது. தலைவனின் தலையில், ஒரு அம்பும், வலது காலில், ஒரு அம்பும் பாய்ந்துள்ளது.
கல்லின் வலது புறத்தின் மேற்புறம், நான்கு குதிரைகள் வரிசையாக உள்ளன. அதற்கு கீழே காவடியும், சாமரமும் வீசக்கூடிய இரண்டு பெண்கள், அதற்கு கீழே பல்லக்கு துாக்கியவாறு, இரண்டு ஆண்கள், அதற்கு கீழே குடைகள் ஏந்தியபடி, மூன்று பெண்கள், அருகில் வீரனது குதிரை உள்ளன. கல்லின் இடது புறத்தில் அமர்ந்த நிலையில் ஒரு ஆண், பக்கவாட்டில், இரண்டு பெண்கள் சாமரசம் வீசும் நிலையிலும், அதற்கு கீழே கைகளில் வில்லுடன் எதிர் எதிராக போரிடும் வீரர்களின் உருவங்களும் இடம் பெற்றுள்ளன. கடைசியாக, நான்கு பெண்கள் காற்று கருவிகளை வாயில் வைத்து இசைக்கின்றனர். கீழே, நான்கு பெண்கள் தோல் கருவிகளை வாசிக்கின்றனர். நடுகல்லின் பக்கவாட்டில் கற்பலகைகள் நட்டு வைத்துள்ளனர். அதில் இடதுபுறம் உள்ள கல் உடைந்து கீழே கிடக்கிறது. அக்கல்லில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அந்த எழுத்துக்களின் அமைப்பு, கி.பி., 8ம் நுாற்றாண்டை சார்ந்ததாகும். இதற்கு நேர் எதிரே உள்ள நடுகல்லில், வீரன் ஒருவன் கையில் வாளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளான். அவனது வயிற்றில் அம்பு பாய்ந்துள்ளது. இந்த நடுகல் கோட்டம், இப்பகுதியில் நடந்த போரில், வெற்றியை தேடித்தந்து மறைந்த தலைவன் மற்றும் அவனது படை தளபதிகளுக்காக எடுக்கப்பட்ட பிரம்மாண்டமான நடுக்கல் கோட்டமாக உள்ளது. இதை கோடியூரப்பன், முனீஸ்வரன் என, இப்பகுதி மக்கள் அழைக்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.