பதிவு செய்த நாள்
03
நவ
2017
02:11
ஊட்டி:கல்லறை திருநாளை முன்னிட்டு, நீலகிரியில் உள்ள கிறிஸ்தவர்கள், தங்களுடைய குடும்பத்தில் இறந்தவர்களின் கல்லறைகளுக்கு சென்று பிரார்த்தனை செய்தனர்.
ஆண்டுதோறும் நவ., 2ம்தேதி, கல்லறை திருநாளாக, கிறிஸ்தவர்கள் அனுசரித்து வருகின் றனர். கல்லறை திருநாளான நேற்று, கத்தோலிக்க மற்றும் சி.எஸ்.ஐ., தேவாலயங்களில் நடந்த திருப்பலியில், இறந்தவர்களை நினைவு கூறும் வகையிலும், அவர்களின் ஆன்மா அமைதியில் இளைபாற வேண்டியும், சிறப்பு பிராத்தனைகள் நடத்தப்பட்டன. ஊட்டி காந்தள் குருசடியில் நடந்த சிறப்பு திருப்பலியில், மறை மாவட்ட பிஷப் அமல்ராஜ், பங்கேற்றார்.
மாவட்டம் முழுக்க ஆங்காங்கே உள்ள கல்லறை தோட்டங்களில் உள்ள தங்கள் குடும்பத்தில் இறந்தவர்களின் கல்லறைகளை, சுத்தப்படுத்தி, மலர்களால் அலங்கரித்து, மெழுகுவர்த்தி ஏந்தி, அவர்களது உறவினர்கள் பிரார்த்தனை செய்தனர்.
ஊட்டி புனித மேரீஸ் தேவாலயம் அருகே உள்ள கல்லறை தோட்டம், காந்தள் குருசடி திருத்தலம் அருகேயுள்ள கல்லறை தோட்டம், காந்தள் முக்கோணம் கல்லறை தோட்டம், ஊட்டி இருதய ஆண்டவர் தேவாலயம், அருவங்காடு பாபு கிராமம், சி.எஸ்.ஐ., திருமண்டலம் சார்பில், ஊட்டி புனித ஸ்டீபன் தேவாலயம், புனித தாமஸ் தேவாலயப் பகுதி என, மாவட்டம் முழுக்க உள்ள கல்லறை தோட்டங்களில் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது.