பதிவு செய்த நாள்
17
நவ
2017
10:11
கார்த்திகை முதல் நாளான சபரிமலை செல்லும் ஐய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவக்கினர். இதனால் கோயில்களில் ஐய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல கால பூஜை கார்த்திகை மாதம் முதல் தேதி துவங்குவது வழக்கம். இந்த நாளில் ஐயப்ப பக்தர்கள் மாலையணிந்து விரதம் துவங்குவர்.
சபரிமலை கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் கோயில்களில் குருசுவாமி துணையுடன் மாலையணிந்து 41 நாட்கள் கடும் விரதமிருப்பது வழக்கம். இந்த ஆண்டு கார்த்திகை முதல் நாளான (17ம் தேதி) காலை முக்கிய கோயில்களில் குருசுவாமி துணையுடன் ஐயப்ப பக்தர்கள் மாலையணிந்து விரதம் துவக்கினர். இதனால் கோயில்களில் வழக்கத்திற்கு மாறாக கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மாலை அணியும் பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் கோயில் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு, மாலை அணிந்து கொண்டனர்.
மாலையிட்ட பக்தர்கள் தினமும் காலை குளித்து கோயில்களுக்கு சென்று சரண கோஷம் எழுப்புவர். இதனையடுத்து பல்வேறு பகுதிகளில் சரண கோஷம் எதிரொலிக்கும். கார்த்திகை மாத சீசனையொட்டி கடைகளில் ருத்ராட்ச மாலைகள், துளசி மாலைகள் விற்பனைக்கு வந்துள்ளது. இவைகள் பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது. அதுபோன்று சபரிமலை செல்லும் பக்தர்கள் காவி, மற்றும் கறுப்பு துணிகள் அணிவதால், கடைகளில் காவி வேட்டியும், காவி துண்டும், அது போன்று கறுப்பு நிற வேட்டியும், துண்டும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.