பதிவு செய்த நாள்
27
நவ
2017
10:11
பழநி: பழநி முருகன்கோயிலில், கார்த்திகை தீபத்திருவிழா நேற்று காப்புக்கட்டுதலுடன் துவங்கியது.பழநி மலைக்கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா நவ.,26 முதல் டிச.,2 வரை நடக்கிறது. விழாவை முதல்நாளை முன்னிட்டு நேற்று மாலை 5:30 மணி சாயரட்சை பூஜையைத் தொடர்ந்து மாலை 6:35 மணிக்கு விநாயகர், மூலவர்தண்டாயுதசுவாமி, சின்னக்குமாரசுவாமி, சண்முகர், வள்ளி, தெய்வானை, துவாரபாலகர்கள், மயிலுக்கு காப்புக்கட்டுதல் நடந்தது.
விழா நாட்களில் உட்பிரகாரத்தில் யாகசாலைபூஜை, சண்முகார்ச்சனை, மகா தீபாராதனை நடக்கிறது. சின்னக்குமாரசுவாமி, தங்கசப்பரத்தில் எழுந்தருளிகிறார். டிச.,1ல் மாலை 6:00 மணிக்குமேல் பரணிதீபம் ஏற்றப்படும். டிச.,2ல் பெரியகார்த்திகையை முன்னிட்டு, மலைக்கோயில் அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. மாலை 5:30 மணிக்கு நடைபெறும் சாயரட்சைபூஜை முன்னதாக மாலை 4:00 மணிக்கு நடக்கிறது. சின்னக்குமாரசுவாமி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளிகிறார். மலைக்கோயில் நான்குபக்கத்திலும் தீபங்கள் ஏற்றப்பட்டு, மாலை 6:00 மணிக்குமேல் திருக்கார்த்திகை தீபம் மற்றும் சொக்கப்பனை ஏற்றப்படுகிறது. இதனால் அன்று இரவு 7:00 மணி தங்கரதப்புறப்பாடு கிடையாது. ஏற்பாடுகளை பழநிகோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர்(பொ)மேனகா செய்கின்றனர்.