தொண்டாமுத்துார்:அடைக்கல அம்மன் கோவிலில் சாட்டை அடி திருவிழா நடைபெற்றது. கோவை, காந்திபார்க் அருகே உள்ள பூசாரிபாளையத்தில், அடைக்கல அம்மன் கோவில் உள்ளது. இங்கு உள்ள நாகர் பீடம், 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இக்கோவிலில் ஆண்டு தோறும் கார்த்திகை மாத இறுதியில் திருவிழா நடத்தப்படும். இத்திருவிழாவில் முக்கிய நிகழ்வாக, பக்தர்கள் சாட்டையால் தங்களை அடித்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். நேற்று முன்தினம், அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் வீதியுலா வந்தார். அதன் பின் பனைமரத்துார் பகுதியில் உள்ள கருப்பராயன் கோவிலில் இருந்து பிடி மண் கொண்டு வந்து பூஜை நடத்தப்பட்டது. இரவு முழுவதும் அம்மனிடம் வைத்து பூஜை செய்த சாட்டையைக் கொண்டு, பூசாரிபாளையம், பனைமரத்துார், தெலுங்குபாளையம் ஆகிய ஊர்களை சேர்ந்த 60 பேர் சாட்டை அடி திருவிழாவில் கலந்து கொண்டனர். இவ்விழாவினை காண திரளான பக்தர்கள் குவிந்தனர்.