பதிவு செய்த நாள்
03
ஜன
2018
11:01
திருப்பரங்குன்றம்: மதுரையில் பல்வேறு கோயில்களில் நேற்று ஆருத்ரா தரிசன விழா நடந்தது. அனுப்பானடியில் நடராஜர் கோயிலில் நேற்று அதிகாலை சிறப்பு பூஜை நடந்தது. காலையில் சுவாமி, சிவகாமி அம்மன் வீதி உலா நடந்தது. இரவு குதிரை வாகனத்தில் அனுப்பானடி வீதிகளில் சுவாமியும், அம்மனும் வலம் வந்தனர். சுப்பிரமணிய சுவாமி கோயிலில் டிச., 24ல் மாணிக்கவாசகருக்கு காப்பு கட்டுடன் விழா துவங்கியது. நேற்றுமுன்தினம் ராட்டின திருவிழா நடந்தது. நேற்று அதிகாலை மூலவர் நடராஜர், சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகர், பதஞ்சலி முனிவர், வியாக்ரபாதர், காரைக்கால் அம்மையாருக்கு அபிஷேகம் முடிந்து தைல காப்பு சாத்துப்படியானது. உற்ஸவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் முடிந்து காப்பு கட்டப்பட்டு, நடராஜர் சிம்மாசனத்திலும், சிவகாமி அம்பாள் வெள்ளி அம்பாரியிலும் தனித்தனி பூ சப்பரத்தில் கிரிவலம் சென்றனர். மலைக்கு பின்புறமுள்ள பால்சுனை கண்ட சிவபெருமான் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் பூஜை, தீபாராதனை முடிந்துகாசிலிங்க அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் நடராஜர், சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. பக்தர்களுக்கு களி பிரசாதம் வழங்கப்பட்டது. மகாலட்சுமி நெசவாளர் காலனி பிரசன்ன வரதராஜப் பெருமாள் கோயிலில் சிறப்பு அபிஷேகம் முடிந்து ஆண்டாள் மாலை மாற்றுதல் வைபம் நடந்தது.
காடுபட்டி: சோழவந்தான், தென்கரை அகிலாண்டேஸ்வரி அம்மன், திருமூலநாதர் சுவாமி கோயிலில் நேற்று அதிகாலை அம்மன், சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, தீபாராதனை நடந்தது.பின், நடராஜர், சிவகாமியம்மன் சப்பரத்தில் எழுந்தருள, விநாயகர், மாணிக்கவாசகர், திருவெம்பாவை, பாட அம்மன், சுவாமி ரதவீதி உலா நடந்தது.பக்தர்களுக்கு திருவாதிரை களிபிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில் ஊடல் உற்ஸவம் நடந்தது. சோழவந்தான் பிரளயநாதர் சுவாமி கோயிலிலும் ஆருத்ரா தரிசனம் நடந்தது.