பதிவு செய்த நாள்
03
ஜன
2018
02:01
வில்லியனுார் : வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலில் நடந்த ஆருத்ரா தரிசனத் தில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வில்லியனுார் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவிலில், திருவெண்பா விழா, கடந்த 24ம் தேதி துவங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடந்த விழாவில் தினசரி காலை மாணிக்கவாசகருக்கு சிறப்பு அபி ஷேக ஆராதனை, அன்னதானம், கோவில் உள்வளாக புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. 1ம் தேதி சுந்தரமூர்த்தி நாயனாருக்கு சிறப்பு அபிஷேகம், இரவு வெள்ளை சாத்துபடி தரிசனம் நடந்தது. நேற்று 10ம் நாள் உற்சவத்தில் ஆருத்ரா தரிசனம் நடந்தது. இதை முன்னிட்டு காலையில் நடராஜருக்கு 32 திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
பகல் 12:00 மணிக்கு மேல் சுந்தரமூர்த்தி நாயனர் முன்னிலையில் அலங்கரிக்கப்பட்ட நடராஜர், அம்பாள் சுவாமிகளுக்கு தனித்தனியாக ஊஞ்சல் உற்சவம் நடந்தது. தொடர்ந்து நடந்த சுவாமி மாட வீதியுலா நிகழ்ச்சியில், தென்கோபுர வீதி வழியாக வந்த நடராஜரிடம் அம்பாள் கோபித்துக்கொண்டு தனியாக சென்றார். பின்னர், நடராஜரையும், அம்பாளையும் சுந்தரமூர்த்தி நாயனார் சமாதனம் செய்த பிறகு, இருவரும் கோவிலுக்குள் சென்றனர். பிற்பகல் 2:30 மணிக்கு மேல் திருக்காமீஸ்வரர் கோவில் குளத்தில் சுவாமிக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் ஆருத்ரா தரிசனம் நிறைவுபெற்றது. இதில், பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.