தேவிபட்டினம்: தேவிபட்டினத்தில் நேற்று தை அமாவாசை என்பதால் நவபாஷாணத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. வருகை தந்த பக்தர்கள் நவகிரகங்களை சுற்றி வந்து வழிபாடு செய்ததுடன், முன்னோர்களுக்கு பிதுர்கடன் செலுத்தி, பல்வேறு பரிகார பூஜைகள் செய்து வழிபாடு செய்தனர்.
திருவாடானை: தொண்டி அருகே தீர்த்தாண்டதானத்தில் சர்வதீர்த்தேஸ்வரர் ஆலயம் உள்ளது. ராமபிரான் சீதையை மீட்க இவ் வழியே ெசன்ற போது இங்கு இளைப்பாறினார். தாகம் ஏற்படவே அகத்தியர், தீர்த்தம் உண்டாக்கி கொடுத்தார். ராமபிரானுக்கு தாகம் தணிந்ததால், தீர்த்தாண்ட தானம் என பெயர் பெற்றதாக ஸ்தல வரலாற்றில் உள்ளது. ஆண்டு தோறும் தை மற்றும் ஆடி மாதங்களில் நடைபெறும் அமாவாசை நாட்களில் பக்தர்கள் நீராடி, ஆலயத்தில் எழுந்தருளியுள்ள சர்வதீர்த்தேஸ்வரர்,பெரியநாயகி அம்மனை வணங்குவது வழக்கம். நேற்று அதிகாலை 5:00 மணி முதல்ஏராளமான பக்தர்கள் புனித நீராட துவங்கினர். சிறப்பு தீப ஆராதனைகளும்அபிேஷகங்களும், சுவாமி வீதி உலாவும் நடந்தது.
கீழக்கரை: திருப்புல்லாணி அருகே சேதுக்கரை கடற்கரையில் தை அமாவாசையை முன்னிட்டு அதிகாலை 4:00 மணியில் இருந்து பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி உள்ளிட்ட சங்கல்ப பூஜைகளை செய்தனர். வெளி மாவட்டத்திலிருந்தும், சுற்று வட்டாரப்பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் குடும்பத்துடன் பங்கேற்று பித்ரு கடன் பூஜைகளை செய்து வழிபாடு செய்தனர். கடற்கரை அருகே உள்ள சேதுபந்தன ஜெயவீர ஆஞ்சனேயர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சேதுக்கரை செல்லும் வழியில் உள்ள அகத்தியர், வெள்ளைப்பிள்ளையார் கோயிலின் முன்பு சிதறு தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றிக் கொண்டனர். சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.மாரியூர் கடற்கரையில் புனிதநீராடி தர்ப்பண பூஜைகளை நிறைவேற்றினர்.