தாராட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்னும் அசுரர்கள் பறக்கும் கோட்டைகளுக்கு அதிபதியாக இருந்தனர். கோட்டைகளில் பறந்து சென்று, திடீரென ஓரிடத்தில் தரை யிறக்கி, உயிர்களைக் கொல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். அவர்களை சிவன் தன் புன்னகையாலேயே கொன்றழித்தார். அப்போது அவரின் கண்ணில் இருந்து வழிந்த நீர்த்துளிகள், ருத்ராட்ச விதைகளாக மாறி மண்ணில் விழுந்து மரங்களாயின. சிவனுக்கு சூரியன் வலக்கண்ணாகவும், சந்திரன் இடக்கண்ணாகவும் உள்ளது. வலதுபுறம் வழிந்த கண்ணீரில் 12வகையும், இடப்புறம் வழிந்த கண்ணீரில் 16வகையும், அக்னியின் அம்சமான நெற்றிக்கண்ணிலிருந்து வழிந்ததில் 10வகை ருத்ராட்சமும் உண்டாகின. ருத்ராட்சத்தில் உள்ள கோடுகளைப் பொறுத்து முகங்களைக் கணக்கிடுவர். இதில் ஒன்று முதல் 16 முகம் வரை உண்டு. ஏக வக்த்ர சிவ சாக்ஷாத் என்று, ஒரு முக ருத்ராட்சத்தை சிவனாகவே போற்றுவர். இருமுகம் ருத்ராட்சத்தை அம்பிகையுடன் சேர்ந்த அர்த்தநாரீஸ்வர அம்சமான கவுரிசங்கர் என்று குறிப்பிடுவர்.