திருப்புத்துார் : திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவம் பிப்.21ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. மார்ச் 2ல் தெப்பம் நடைபெறுகிறது. சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவம் 11நாட்கள் நடைபெறும். பிப்.,20 மாலை 5:30 மணிக்கு சேனை முதல்வர் புறப்பாடு நடக்கிறது. முதல் திருநாள் பிப்.,21 காலை 6:00 மணிக்கு மேல் பெருமாள் தேவியருடன் திருநாள் மண்டபம் எழுந்தருளல் நடைபெறும்.
தொடர்ந்து காலை 10:00 மணிக்கு கொடியேற்றத்துடன் உற்ஸவம் துவங்குகிறது. தினசரி காலை பெருமாள் தேவியருடன் புறப்பாடும், இரவில் வாகனங்களில் திருவீதி உலா நடைபெறும். ஆறாம் திருநாள் பிப்.26 இரவில் ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதலும், பிப்.27 மாலையில் பெருமாளுக்கு பொற்காசுகளால் அபிேஷகமும், மார்ச் 1 காலையில் தெப்பம் முட்டுத்தள்ளுதல், இரவில் வெண்ணைத்தாழி கிருஷ்ணர் அலங்காரத்தில் பெருமாள் காட்சிதருதலும், மார்ச் 2ல் பகல் 12:45மணிக்கு பகல் தெப்பமும், இரவில் 10:00 மணிக்கு தெப்பம் வலம் வருதலும் நடைபெறும். மார்ச் 3ல் காலையில் தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரியும், இரவில் தங்கப்பல்லக்கில் ஆஸ்தானம் எழுந்தருளலும் நடைபெறும். பெண்கள் கோயிலிலும், தெப்பக்குளத்திலும் தீபம் ஏற்றி தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற பெருமாளை பிரார்த்திப்பது இந்த உற்ஸவத்தின் சிறப்பு.