பதிவு செய்த நாள்
08
மார்
2018
11:03
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே வைகை கிராமத்தில் மத நல்லிணக்கத்தை உணர்த்தும் வகையில் பத்ரகாளியம்மன் கோயிலுக்குள் முஸ்லிம் தர்கா அமைந்துள்ளது.
இரு தரப்பு மக்களும் தங்களது தெய்வங்களை வணங்கி வருகின்றனர். ராமநாதபுரம் உத்திரகோசமங்கை அருகே வைகை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அனைத்து சமூகத்தினரும் வணங்கி வரும் பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் வளாகத்தில் முத்தாலம்மன், பைரவர், முத்துக்கருப்பசுவாமி, கருப்பணசுவாமி ஆகிய சன்னிதிகள் உள்ளது. பத்ரகாளியம்மன் கோயில் பின்புறம் முஸ்லிம் தர்கா ஒன்றும் உள்ளது. இந்துக்கள் சார்பில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள் இந்துக்கோயில்களில் தெய்வங்களை வணங்கி செல்கின்றனர். அதே போல் முஸ்லிம் தர்காவில் முஸ்லிம் சமுதாயத்தினர் நத்தம், தொருவளூர் உட்பட பக்கத்து கிராமங்களில் இருந்து வந்து பாத்தியா ஓதி வணங்கி செல்கின்றனர்.
இரு தெய்வங்களும் ஒரே வளாகத்திற்குள் இருந்தாலும், இன்று வரை சகோதரர்களாகவே பழகி வருகின்றனர். கோயில் பூசாரி சத்தியமூர்த்தி தெரிவித்ததாவது: எங்களது மூதாதையர் காலத்தில் திருநெல்வேலி பகுதியில் இருந்து வணிகத்திற்காக வந்த முத்தாலசாயுபு, அசதி காரணமாக பத்ரகாளியம்மன் கோயில் வாசலில் ஓய்வு எடுத்துள்ளார். அப்போது பத்ரகாளியம்மன் எனது மக்கள் வரும் இடம், எனக்கு பின்புறம் உள்ள இடத்தில் ஓய்வு எடுத்துக்கொள். எனக்கு கிடைக்கும் பங்கில் ஒரு பங்கு உனக்கும் கிடைக்கும், என்று தெரிவித்ததால், முத்தாலசாயுபு பத்ரகாளியம்மன் கோயில் பின் பகுதியில் அடக்கமாகியுள்ளார். அப்போதிருந்தே இந்து முஸ்லிம் பாகுபாடி இன்றி தெய்வங்களை மக்கள் வணங்கி செல்கின்றனர். பத்ரகாளியம்மன் உட்பட அனைத்து இந்து தெய்வங்களுக்கும் படையல் போடுவது போல் முஸ்லிம் தர்காவுக்கும் ஒரு படையல் போடப்படும். இந்து தெய்வங்களுக்கு செய்யப்படும், அனைத்தும் தர்காவுக்கும் செய்யப்படும். முஸ்லிம் சமுதாயத்தினர் முதலில் பத்ரகாளியம்மன் பூஜை நடந்த பின்னர் தான் தங்களது தர்காவில் பாத்தியா ஓதுவார்கள். பத்ரகாளியம்மனுக்கு தேவையான பொங்கல் சாமான்களை முஸ்லிம் மக்கள் வாங்கி தருவார்கள், அதில் பொங்கல் வைத்து சுவாமிக்கு படைப்போம். பல தலைமுறைகளாக இந்த வழக்கம் தொடர்ந்து வருகிறது. எல்லோரும் சகோதரர்களாக பழகி வருகின்றனர், என்றார்.