பதிவு செய்த நாள்
25
மே
2018
12:05
நேரடி பணியாளர் நியமனத்தில், லஞ்சம் தலைவிரித்தாடும் என்பதால், தமிழக கோவில்களுக்கான பணியாளர் நியமனங்களை, தேர்வு வாரியம் வாயிலாக நடத்த வேண்டும் என்ற, கோரிக்கை வலுத்துள்ளது. தமிழகத்தில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், 38 ஆயிரம் கோவில்கள் உள்ளன. இவற்றில், ஒரு லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கான சம்பளம், கோவில் வருவாயில் இருந்து வழங்கப்படுகிறது. பல ஆண்டுகளாக, பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால், 40 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில், தற்காலிக பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள், பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், அரசு உத்தரவையடுத்து, காலி பணியிடங்களை நிரப்பும் முயற்சியில், அறநிலையத்துறை ஈடுபட்டுள்ளது. அதேநேரத்தில், நேரடி நியமனத்திற்கு, கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இது குறித்து, ஆன்மிக நலம் விரும்பிகள் கூறியதாவது: கட்சியினர் சிபாரிசிலோ, லஞ்சம் கொடுத்தோ, நேரடி நியமனத்தில், கோவில் பணியாளர்களாக பலர் வந்து விடுகின்றனர். இவர்கள், கோவில் நிர்வாகங்களில், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டால், தற்காலிக பணியாளர்களே காரணம் எனக்கூறி, அவர்களை பணி நீக்கம் செய்து சமாளித்து விடுகின்றனர். இந்தப் பிரச்னைகளை தவிர்க்க, நேரடி நியமனமின்றி, தேர்வு வாரியம் வாயிலாக, கோவில் பணியாளர்களை தேர்வு செய்ய வேண்டும். இதனால், தகுதியான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதோடு, முறைகேடுகளும் தவிர்க்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
டுபாக்கூர் நிறுவனம் பேரம்!
கோவில்களில் காலி பணியிடங்களை நிரப்ப, அறநிலையத்துறை முயன்று வரும் நிலையில், அறநிலையத்துறை அமைச்சகம் என்ற பெயரில், டுபாக்கூர் நிறுவனம் ஒன்று, இரண்டே மாதங்களில் கோவில்களில், அரசு வேலை வாங்கி தருவதாக, வாட்ஸ்ஆப் வாயிலாக பிரசாரம் செய்து வருகிறது. அதில், குறிப்பிட்டுள்ள எண்ணில் தொடர்பு கொண்டால், அந்த நிறுவனத்தினர் முகவர்களை நேரில் அனுப்பி, இளைஞர்களை மூளை சலவை செய்கின்றனர்.விண்ணப்பம் பெறும் போது, 50 ஆயிரம் ரூபாயும், முன்பணமாக நான்கு லட்சம் ரூபாய்; பணிக்கான ஆணை வந்தவுடன், ஆறு லட்சம் ரூபாய் தர வேண்டும் என, பேரம் பேசுகின்றனர். இதுகுறித்து, அறநிலையத்துறை தீவிர விசாரணை நடத்தி, அப்பாவி இளைஞர்களை காப்பாற்ற வேண்டும். - நமது சிறப்பு நிருபர் -