பிரசித்தி பெற்ற சத்தியமங்கலம்: பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா கடந்த 17ம் தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து தினமும் அம்மன் திருவீதி உலா நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் திருவிழா இன்று மார்ச் 31ம் தேதி நடைபெற்றது. விழாவையொட்டி, கோவிலை சுற்றியுள்ள கிராமங்களில் பண்ணாரி அம்மன் உற்சவர் ஊர்வலம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாள்தோறும் சிறப்பு பூஜைகள் மற்றும் மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடனங்கள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வாக குண்டம் விழா நடைபெற்றது. பக்தர்கள் காணிக்கையாக அளித்த வேம்பு,ஊஞ்சல் மரத்துண்டுகளை கொண்டு தீக்குண்டம் வளர்க்கப்பட்டது. விழாவையொட்டி பண்ணாரி அம்மனுக்கு தங்ககவசம் சாத்தப்பட்டு வீணை அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.45 மணிக்கு படைக்கலத்துடன் திருக்குளம் சென்று அங்குள்ள சருகுமாரியம்மனுக்கு பூஜைகள் செய்யப்பட்டு,தாரை தப்பட்டை முழங்க,மேளதாளங்களுடன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் உற்சவர் குண்டத்துக்கு அழைத்து வரப்பட்டது. குண்டத்தில் கற்பூரம் ஏற்றி பூஜை செய்தும் மலர்களை குண்டத்தில் தூவினர்.அதிகாலை முதலில் பூசாரி பார்த்திபன் குண்டத்தில் இறங்கி தீ மிதித்தார். அதனைத் தொடர்ந்து இசைக்கலைஞர்கள், பொது மக்கள்,உள்ளிடோர் அரசு அதிகாரிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள், மாணவிகள்,திருநங்கைகள், கைக்குழந்தையுடன் பெண்கள், காவலர்கள்,வனத்துறையினர் என லட்சக்கணக்கானோர் தீ மிதித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.