இப்போதுவெற்றிலை சாப்பிடுபவர்களை எல்லாம் பட்டிக் காட்டான் போல பார்ப்பதும், ‘வெற்றிலையெல்லாம் தாத்தா, பாட்டி சமாசாரம்’ என்பதும் இயல்பாகி விட்டது. ஆனால், முன்னோர்கள் இதன் மகிமை அறிந்து பயன்படுத்திய விதமே ஒரு கலை தான். சுபநிகழ்ச்சிகளில் தாம்பூலப்பை கொடுப்பர். அதில் தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு இருக்கும். இதில் வெற்றிலை, பாக்கில் தான் விஷயம் இருக்கிறது. லட்சுமியின் அம்சமான இதை விருந்தின் நிறைவாக கொடுத்து வழியனுப்புவர். அறிவியல் ரீதியாக பார்த்தால், வெற்றிலை ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. விருந்தில், ‘தடபுடல்’ சாப்பாட்டால் வயிறு ஜீரணிக்க சிரமப்படும். ஆனால், வெற்றிலையை நன்கு மென்று சாப்பிட, அதன் சாறு ஜீரண சக்தியை அதிகப்படுத்தும். நாக்கில் ஏற்படும் சுவையற்ற தன்மையை போக்கும் சக்தி அதற்கு உண்டு. வெற்றிலையை தனியாக சாப்பிட்டால் ரத்த ஓட்டம் பாதிக்கும். பாக்கை தனியாக சாப்பிட்டால் ரத்த சோகை உண்டாகும். அதனால், வெற்றிலையை பாக்குடன் சேர்த்து உண்பதே முறை. வெற்றிலைக் காம்பில் கண்ணுக்கு தெரியாத சிறுபூச்சிகள் இருக்கலாம். எனவே அதன் காம்பை கிள்ளி விட்டு சாப்பிடுவது நல்லது. மனதிற்கு லட்சுமியாகவும், உடலுக்கு லட்சணமாகவும் இருப்பதால் அது வெற்று இலை அல்ல ‘வெற்றி இலை’!