கங்கைக் கரையில் உள்ள புண்ணிய தலங்களில் சிறப்பானவை காசி, பிரயாகை, ஹரித்துவார். பிரயாகையை ‘அலகாபாத்’ என்று சொல்வர். இங்கு யமுனையோடு கங்கை கலக்கிறது. அலகாபாத் அருகில் கங்கை, யமுனை, சரஸ்வதி சேரும் ‘திரிவேணி சங்கமம்’ புண்ணிய தீர்த்தமாக விளங்குகிறது. திருப்பாவையில் ‘மாயனை மன்னு வடமதுரை மைந்தனை தூயபெருநீர் யமுனைத் துறைவனை’ என்று கண்ணனின் சிறப்பை யமுனை நதியோடு இணைத்து, ஆண்டாள் குறிப்பிடுகிறாள். யமுனைக் கரையில் அமர்ந்து காயத்ரி மந்திரம் ஜபித்தால் விசேஷ பலன் கிடைக்கும். இங்கு சரஸ்வதி ‘அந்தர்வாகினி’யாக (கண்ணுக்கு தெரியாமல் மறைவாக இருக்கும் நதி) ஓடுகிறது. திரிவேணி சங்கமத்தை ‘தீர்த்தங்களின் ராஜா’ என்பர். இங்கு வெண்ணிற கங்கையும், கருமை நிற யமுனையும் கலப்பதைக் காணலாம். பிரம்மா யாகம் செய்த இடம் என்பதால் ‘பிரயாகை’ எனப்படுகிறது.