மகனுக்கு ஒரு தங்கப் பொம்மையை பரிசளித்த தந்தை,“மகனே! வாழ்க்கையில் எதைத் தொலைத்தாலும், இதை தொலைத்து விடாதே. ஏதாவது சிரமம் ஏற்பட்டால், இதை விற்றால் பெரும் பணம் கிடைக்கும். அது உனக்கு கைகொடுக்கும்,” என்றார். சில காலத்துக்குப் பின் தந்தை இறந்தார். மகனும் தங்கப் பொம்மையை கண் என பாதுகாத்தான். ஒருநாள் தனது பண்ணைக்குச் சென்று விட்டு திரும்பியவன், பொம்மை இருந்த பெட்டியை திறந்தான். உள்ளே பொம்மையைக் காணவில்லை. யாரோ திருடியது தெரிந்தது. அவன் வேதனையில் ஆழ்ந்தான். அந்த நினைப்பிலேயே பண்ணை வேலைகளை மறந்தான். ஒரு கட்டத்தில் பெரும் நஷ்டமாகி, பண்ணையை விற்றான். ஒருநாள் ஒரு கிராமத்துக்குச் சென்றான். அங்கிருந்த விவசாயக் குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் இருப்பதைப் பார்த்தான். அந்த வீட்டுப் பெரியவர் தன் மகன்களிடம், “பிள்ளைகளே! நீங்கள் இன்றிருக்கும் நிலம், பொருள் ஆகியவற்றை நம்பாதீர்கள். இவை ஏதோ ஒரு காரணத்தால், நம் கையை விட்டுப் போய்விடும் நாள் வரலாம். உழைப்பே என்றும் நிலையானது. அது என்றைக்கும் சோறு போடும். நாம் இந்த பண்ணைகளின் எஜமானர்கள் என்பதற்காகவும், செல்வம் இருக்கிறதே என்பதற்காகவும் வயலுக்குள் இறங்கி உழைக்க தயங்கக் கூடாது. ஒருவேளை இந்த செல்வம் நம்மை விட்டுப் போனாலும், உழைப்பு உங்களை ஒருநாளும் கைவிடாது,” என்றார். அவர்களும் அப்படியே செய்வதாக வாக்களித்தனர். இதைக் கேட்ட அந்த மகன், தனது தந்தையும் தனக்கு தங்கப் பொம்மைக்கு பதிலாக இத்தகைய அறிவுரையைத் தந்திருந்தால், தனது செல்வம் பறி போயிருக்காதே என்று ஆதங்கப்பட்டான். ஆம்...உழைப்பு மட்டுமே நமது நிரந்தரச் சொத்து. மற்றவை யெல்லாம் சூழ்நிலைகளால் அழியக்கூடியவை.