கோயில் திருவிழாவின் போது, கல் சிலைகள் பவனி வருவதில்லை. தாமிரம் அல்லது பஞ்சலோகத்தில் செய்யப்பட்ட உலோகச் சிலைகள் மட்டும் பவனி வரும். தங்கம், வெள்ளி, தாமிரம், துத்தநாகம், ஈயம் கலந்தது பஞ்சலோகம். முதுமை, நோய், கர்ப்ப காலம் என பல காரணங்களால் பலரும் கோயிலுக்கு செல்ல முடியாமல் சிரமப்படுவர். கடவுளின் அருளை அவர்கள் பெற வேண்டும் என்பதற்காக, விழாக்காலத்தில் சுவாமி பவனி வரும் வழக்கம் உள்ளது. மின்சார ஒயருக்குள் இருக்கும் செம்புக் கம்பி மின் ஆற்றலை வேகமாக கடத்தும். அது போல, செம்பு அல்லது பஞ்ச லோகம் கருவறையில் உள்ள மூலவரின் ஆற்றலை ஈர்த்துநமக்கு வழங்குகிறது. ‘இறைசக்தி’ எனும் மின்சாரம் அனைவரையும் சென்றடைய உற்ஸவர் பவனி உருவாக்கப்பட்டது.