பதிவு செய்த நாள்
16
ஆக
2018
01:08
கோவை, சொக்கம்புதுார் செல்லாண்டியம்மன் கோவிலில் நடந்த கொம்பன் வேட்டை திருவிழாவில், பக்தர்கள், ரத்தச்சோறு உட்கொண்டனர்.செல்வபுரத்துக்கும், பூசாரிபாளையத்துக்கும் இடையே சொக்கம்புதுார் உள்ளது. இங்குள்ள செல்லாண்டியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும்.
கடந்த, 10ல் நவமி திதியன்று விழா துவங்கியது.கடந்த, 13ல் அண்ணன்மார் கதை படிக்கும் நிகழ்ச்சி நடந்தது. அன்றிரவு அண்ணன்மார் உற்சவ சிலைகள் அலங்கரிக்கப்பட்டு, அழைத்து வரப்பட்டது. நேற்று முன்தினம் அதிகாலை, 6:00க்கு கொம்பன் வேட்டை நிகழ்ச்சி நடந்தது. கோவில் முன் கிடத்தப்பட்டிருந்த இரு பன்றிகளை, பூசாரி ஈட்டியால் குத்தினார். அதில் இருந்து வெளியேறிய ரத்தத்தை சோற்றோடு கலந்து, வழங்கினார். அவற்றை கூடியிருந்த பக்தர்கள் பிரசாதமாக பெற்று சுவைத்தனர்.பக்தர்கள் கூறுகையில், பொன்னர், சங்கர் இருவரும் சகோதரர்கள். இவர்களது தங்கை அருக்காணி. இவர்களது வாழ்க்கையே அண்ணன்மார் கதை. பொன்னரும் சங்கரும் மறைந்தபின், அவர்கள் கடவுளாக்கப்பட்டு கோவில் கட்டப்பட்டது. அப்போதைய பொன்னிவள நாட்டில், பொன்னர் சங்கர் இருவரும் இணைந்து, கொடிய பன்றிகளை ஈட்டி வீசி கொன்றனர். அதன் நினைவாக, கொம்பன் வேட்டை விழா நடத்தப்படுகிறது என்றனர்.