பதிவு செய்த நாள்
07
பிப்
2012
12:02
திருச்செந்தூர் :திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் இன்று தைப்பூசத் திருவிழா கோலாகலமாக நடக்கிறது. விழாவில் கலந்துகொள்ள தமிழ்நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர். தமிழ்கடவுளாம் முருகப்பெருமானின் ஆறுபடைவீடுகளில் இரண்டாவது படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடக்கும் முக்கிய திருவிழாக்களில் தைப்பூசத் திருவிழாவும் ஒன்று. அதிகாலை 3 மணிக்கு நடைதிறப்பு: முருகன் குடிகொண்டுள்ள அனைத்து திருத்தலங்களிலும் இன்று தைப்பூசத் திருநாள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று தைப்பூசத் திருநாளை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது. தொடர்ந்து 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசன தீபாராதனையும், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடக்கிறது. அதனைதொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. உச்சிகால தீபாராதனை முடிந்தபிறகு சுவாமி அலைவாயுகந்த பெருமான் வடக்குரதவீதியில் உள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடக்கிறது. அதனைத் தொடர்ந்து சுவாமி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். திருச்செந்தூருக்கு தற்போது எல்லா நாட்களிலும் பாதயாத்திரையாக பக்தர்கள் வந்தாலும் தைப்பூசத் திருநாளுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களின் எண்ணிக்கை பல ஆயிரங்களை தாண்டும். இது கடந்த சில வருடங்களாக பல மடங்கு அதிகரித்துவருகிறது. திருச்செந்தூர் நோக்கிவரும் அனைத்து ரோடுகளிலும் பச்சை ஆடை உடுத்திய முருகனின் பக்தர்களாகவே காட்சியளிக்கின்றனர். அந்தளவுக்கு திருச்செந்தூர் தைப்பூச திருவிழாவில் கலந்துகொள்ள தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் விரதமிருந்து பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.
அருப்புக்கோட்டை திருச்செந்தூர் ரோடு: அருப்புக்கோட்டை, காரியாபட்டி, மதுரை உள்ளிட்ட இடங்களில் இருந்துவரும் ஆயிரக்கணக்கான பாதயாத்திரை பக்தர்கள் சிந்தலக்கரை வெட்காளியம்மன் கோயில், கீழஈரால், எப்போதும்வென்றான் உள்ளிட்ட இடங்களில் தங்கியிருந்து வந்து கொண்டிருக்கின்றனர். இதைப்போல் திருநெல்வேலி, தென்காசி, பாவூர்சத்திரம், கடம்பூர், கயத்தாறு உள்ளிட்ட இடங்களில் இருந்துவரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள புதுக்குடி, ஆழ்வார்திருநகரி உள்ளிட்ட இடங்களில் தங்கியிருந்து அங்கிருந்து மீண்டும் திருச்செந்தூர் நோக்கி பாதயாத்திரையாக வந்துகொண்டிருக்கின்றனர். இன்று அதிகாலை இவர்கள் அனைவரும் திருச்செந்தூர் கோயிலுக்கு வந்துசேர்ந்துவிடுவர்.
சிறப்பு பஸ்கள் இயக்கம்: திருச்செந்தூர் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, அருப்புக்கோட்டை, விளாத்திகுளம், கோவில்பட்டி, ராஜபாளையம், நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. கோயிலை சுற்றிலும் 24 மணிநேரமும் பக்தர்களுக்கு தண்ணீர் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சுகாதார வசதியும் செய்யப்பட்டுள்ளது. திருச்செந்தூர் டிஎஸ்பி தலைமையில் சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும் கடலின் ஆழமான பகுதிக்கு யாராவது சென்றுவிட்டால் அவர்களை மீட்பதற்கு தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் கோயில் வளாகத்தில் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சிறப்பு பஸ்கள் மற்றும் வேன், கார் மூலம் வருவார்கள் என்பதால் பக்தர்களின் எண்ணிக்கை பல லட்சங்களை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் சுதர்சன், கோயில் தக்கார் மணிகண்டன் தலைமையில் கோயில் அலுவலர்கள், பணியாளர்கள் செய்துவருகின்றனர்.