பதிவு செய்த நாள்
10
அக்
2018
05:10
துாத்துக்குடி: திருச்செந்துார் அருகே, குலசேரபட்டினத்தில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்தியாவில், மைசூருக்கு அடுத்த படியாக தமிழகத்தில் துாத்துக்குடி, குலசேகரன்பட்டினம், முத்தாரம்மன் தசரா திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. ஆண்டு தோறும் நடக்கும் இந்த விழாவில், ஐந்து லட்சத்திற்கு அதிகமானோர் கூடுவர். இந்த ஆண்டு தசராத் திருவிழா, இன்று (அக்.,10ல்) கொடியேற்றத்துடன் துவங்கியது.
காலை, 5:00 மணிக்கு, யானை மீது, கொடிப்பட்டம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, காலை 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், கொடியேற்றமும் நடைபெற்றது.கொடியேற்றத்திற்குப் பின், வேடமணிபவர்கள் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், 19-ம் தேதி முக்கிய நிகழ்ச்சியான மகிஷாசூரசம்ஹாரம் நள்ளிரவு, 12:00 மணிக்கு கடற்கரையில் நடக்கிறது. அன்றைய தினம், தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து, ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் குலசேகரன்பட்டினத்தில் கூடுவர். இதில், பல பகுதிகளில் இருந்தும், வேடம் அணிந்த பக்தர்கள் ஊர்வலமாக வருவார்கள். விழாவையொட்டி, ஆலோசனைக் கூட்டம் நேற்று, மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்தது.