பதிவு செய்த நாள்
08
நவ
2018
05:11
உத்ரகண்ட் மாநில இமயமலைத் தொடரில் உள்ள அமைந்துள்ள ஜாகேஷ்வர் ஆலயம் என்பது சிறிதும் பெரிதுமாக நுாற்று இருபத்தைந்து கோவில்களைக் கொண்டுள்ளது. தென்மாநிலங்களில் அதிகம் பிரபலம் இல்லை ஆனால் பிரபலமாக வேண்டும் காரணம் அந்த இடத்தின் பழமையும் பெருமையும் அப்படிப்பட்டது.
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள அல்மோரா மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து 1870 மீ உயரத்தில் அமைந்துள்ள ஆன்மீக சுற்றுலாத் தலம்தான் ஜாகேஷ்வர். ஏழாம் நூற்றாண்டில் சுயம்புவாக உருவான லிங்கம் தான் இங்குள்ள கோவிலுக்குள் இருக்கின்றது இவருக்கு பெயர் ஜாகேஷ்வர் இவரது பெயரே ஊர்ப்பெயருமாகிவிட்டது.
சாதாரண மக்கள் அறிந்திராத புண்ணிய பூமி ஆனால் பல நுாற்றாண்டுகளாக யோகிகள் விழைந்த பிரதேசம்.சீனாவின் பிடியிலிருக்கும் கயிலாயத்திற்கு இந்தியாவின் வழியாக செல்லவேண்டும் எனில் ஜாகேஷ்வரை கடந்துதான் செல்லவேண்டும் அப்படி செல்லும் வழியில் ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட சிவலிங்கமே மகா மிருத்யுஞ்சர் மகராஜ் என்ற பெயருடன் இங்கு பிரதான தெய்வமாக இருந்து அருள்பாலித்துக் கொண்டு இருக்கிறார். ஜடகங்கா(சிவனின் ஜடா முடியில் இருந்து தோன்றிய நதி என்பதால் இந்தப் பெயர்)நதி அருகே அமைந்துள்ள இவ்விடம் தேவதாரு மரங்களின் பசுமையால் அழகுற காட்சித்தருகின்றது.இந்த மரங்கள் அடர்ந்த சூழலின் காரணமாகவே இது தாருகவனம் என்றும் போற்றப்படுகிறது.
9-ம் நுாற்றாண்டு முதல் 13-ம் நூற்றாண்டு வரை கட்டப்பட்டு, சிவனுக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட தந்தேஷ்வர் கோவில், ஜாகேஷ்வர் கோவில், சாண்டிகா கோவில், மஹாமிருத்யுஞ்சயா கோவில், குபேரர் கோவில், நவகிரக கோவில், மற்றும் நந்தா தேவி கோவில் போன்ற புகழ்மிக்க 124 பெரிய மற்றும் சிறிய கோவில்களை உள்ளடக்கிய ஜாகேஷ்வர் நகரத்தை கோவில் நகரம் என்று அவர்கள் அழைப்பது பொருத்தமானதே. கோவில்கள் அனைத்தும் அந்தக்காலத்தில் கிடைத்த பாறைகளைக் கொண்டே கட்டியுள்ளனர். இதன் தலைப்பகுதியான கலசப்பகுதியை பாதுகாக்கும் பொருட்டு இரும்பு தகடு கொண்டு மூடிவைத்துள்ளனர்.முக்கியமான கோவில்கள் தொல்பொருள்துறையினரின் பாதுகாப்பிலும், பராமரிப்பிலும் உள்ளது.
தட்சனால் அவமதிக்கப்பட்டு உடலை நீத்த பார்வதி சிவனை அடைய தவம் இயற்றிய பூமி.கயிலையில் உறையும் பரமசிவனின் பாகமாக மாறிய இவள் தேவர்கள் துயரறுக்கக் அரக்கர்கள் கருவறுக்க குமரனை(முருகன்) பெற்றதன் காரணமாக இந்த பகுதி குமாவுன் எனவும் அழைக்கப்படுகிறது.