பதிவு செய்த நாள்
08
நவ
2018
05:11
சினிமாக்களிலும்,புகைப்படங்களிலும்,காலண்டர்களிலும் மட்டுமே பார்த்து வியந்து ரசித்த பனி உறைந்த இமயமலை பார் என் அழகை என்று சொன்னபடி ஆகாயத்தில் பரந்து விரிந்திருந்தது.
செதுக்கி எடுத்து வைத்த வெண்பனிச் சிற்பமோ? ,வானத்தில் வரைந்து வைத்த ஒவியமோ? என்றெல்லாம் வியக்கும்படியாக வார்த்தைகளில் விவரிககமுடியாத அழகுடன் பனி சூழ்ந்த இமயம் கம்பீரமாக மிக கம்பீரமாக தரிசனம் தந்தது. மலைப்பாதையில் செல்ல செல்ல சாலையின் விளிம்புகள் வழியே, விருட்சமாய் இமய மலை வரிசை வரிசையாய் விரிகின்றது..அய்யோ..பனி போர்த்திய ஒவ்வொரு விளிம்பும் சூரிய ஒளியில் ஜொலிக்க ஒவ்வொருவரும் சிலிர்ந்துத்தான் போனார்கள். இது நந்தாகுந்தி, அது திரிசூல் என இமயமலைக்குன்றுகளை பெயர் சொல்லி எங்களுக்கு அறிமுகம் செய்துவைத்தார் இப்படி ம்ருக்த்யதுணி, நந்தாதேவி பஞ்சசீலி என வரிசையாய் இமயமலையின் அத்தனை முகப்பும் வரிசையாய் மிளிற அது ஒரு ஆனந்தவெளி.
வழக்கமாய் அத்தனை உச்சியையும் பார்ப்பது அரிதாம். வானம் மேகமூட்டமின்றி இருந்ததால் அன்று இமயம் என்ற பெயரில் கிடைத்தது இறை பிரசாதம் எனும் இயற்கையின் வரப்பிரசாதம். இந்த ஆனந்த அனுபவத்தை அனுபவித்தபடி ஜாகேஷ்வரை அடைந்தோம்.
பெரும் சக்ரவர்த்திகள் ஆட்சியைத் தனக்கடுத்த தகுதியானவருக்கோ பிள்ளைகளுக்கோ பட்டம் சூட்டிவிட்டு, இங்கு வந்து வடக்கே அமர்ந்திருந்து, (வடக்கிருந்து)உலகைத் துறந்ததாக சரித்திரம் உள்ளது. கைலாய மலை உச்சி(இன்று சீனத்தில் உள்ள கைலாஷ்)க்கு இங்கிருந்துதான் இப்போதும் செல்கிறார்கள். சென்றிருக்கின்றார்கள். மலை உச்சியில் விருத்த ஜாகேஷ்வர் ஆலயமும், 14கிமீட்டருக்குக் கீழே, ஜாகேஷ்வர் ஆலயமும், அப்படி ஒரு அழகும் தொன்மமுமாய் அமைந்திருக்கின்றது. சிவனைபோலவே, அழகாக கோயிலுக்குள் நெடுந்துயர்ந்து நிற்கும் தேவதாரு மரமும் மிகப்பிரம்மாண்டமாய் உள்ளது. ஜாகேஷ்வர் ஆலயத்துள் குட்டி குட்டியாய் 125 கோபுரங்கள் லிங்கத்துடன் உள்ளது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம். நம் தமிழக சிவன் கோயில்கள் கட்டமைப்பு போலில்லாமல், ஒரிசா அங்கூர்வாட் கொனார்க் மாதிரியான கட்டமைப்புக்கள். பார்க்க பார்க்க, "எப்படி அவ்வளவு நேர்த்தியாகக் கற்கள் அடுக்கி கட்டமைக்கப்பட்டிருக்கின்றது?" என் நம் கண்கள் ஆச்சரியத்தில் விரிகின்றது. இங்கு நாமே சாமிக்கு ஆர்த்தி செய்யலாம். நீர் ஊற்றி வழிபடலாம். சாமியைத் தொட்டுத்தடவி ஆண்/பெண் சாதி பேதமின்றி எல்லோரும் வழிபடலாம்.இந்த ஊரில் உள்ள பண்டிட்டுகள் ஒவ்வொரு சாமிக்கும் பூசை செய்கின்றனர். பூர்வ பழங்குடி மக்கள் பூசாரிகளும் உள்ளனர். மொத்த கோயிலும் மத்திய அரசின் தொல்பொருள் பாதுகாப்புத் துறையால் பாதுகாக்கப்படுகின்றது. இவ்விடத்தை சிவன் கைலாயத்தில் இருந்து காலூன்றிய இடம் என்று சொல்கின்றார்கள். "ஓம் நமசிவாய" மந்திரம் பூமியில் பிறந்த இடம் இது என்றும் சொல்கின்றார்கள். கோயிலில் சந்தனத்துக்கு பதிலாக தேவதாரு கட்டையை நம் முன்னால் இழைத்து நெற்றியில் பூசி விடுகின்றார்கள்.
விருத்த ஜாகேஷ்வர், ஜாகேஷ்வர் கோயில் இருக்கும் இடத்தில் இருந்து 14கிமீட்டர் உயரத்தில் இருக்கும் மலை உச்சி. அங்கும் ஒரு மிக அழகான சிவன் கோவில் உள்ளது. இதன் மலை உச்சியில் இருந்து பார்க்கும் ஒவ்வொரு இமாலய உச்சியும் அவ்வளவு அழகு. திரிசூலம், நந்திதேவி, நந்தா கண்ட், ராஜரம்பா என வரிசையாய் இமயமலை தொடர் உச்சிகள். உத்தர்கண்ட் மாநிலம் முழுமையும் இமயமலை தொடர்கள்தாம் கார்வால் குமாயுன் மலைத்தொடர்கள் சேர்ந்ததுதான் இந்த மொத்த மாநிலமே. கேரளத்தை கடவுளின் நிலம் என்று சொல்வது போல இதனை தேவபூமி எனைச் சொல்கின்றார்கள். பெரும்பாலும் மாநிலம் முழுமையும் வழிபாட்டுத்தலங்கள்.
ஆன்மீகச் சுற்றுலா ஒருபக்கம் என்றால் இன்னொருபக்கம் ஹைட்ரோபவர், ரிசார்ட்டுகள், கேபிள்கார், மலைவாழிடச் சுற்றுலாவுக்கான தொழில்வளர்ச்சியை நோக்கி இம்மாநிலம் வேகமாக நகர்ந்து கொண்டிருப்பது அப்பட்டமாகத் தெரிகின்றது. நிறைய அணைகள், நீர்தேக்கங்கள்,ஹைட்ரோபவர் நிறுவனங்கள், மண் தாது கனிம நிறுவனங்கள் முளைத்துள்ளனவாம். "நாங்கதான் பக்கத்து பல மாநிலத்துக்கு ஏன் டெல்லி ஜனாதிபதி அரண்மனைக்கே கரண்ட் கொடுக்கிறோம். தெரியுமா?", என பெருமையாக இந்த ஊர்க்காரர் எங்களின் வழிகாட்டி மனோஜ் பையா சொன்னார்.
"சுற்றியுள்ள ஒவ்வொரு மரமும் எங்களுக்கு சிவன் மாதிரி. இங்கு உள்ள எல்லாக்காட்டிலும் உள்ள மரங்களின் எண்ணிக்கை கூட எங்களுக்குத் தெரியும்.யாரும் தொட முடியாது. முதிர்ந்து விழும் தேவதாரு கட்டையை மட்டுமே பயன்படுத்துவோம் ." என்றார். கூடவே "இவ்வளவு அழகான இமயத்திட்டில் பிரசத்தியான ஓட்டலும், நெடு உயர் கட்டடமும் வராது சார். வரவும் கூடாது. வந்தால் எங்கள் நிலத்தை நிலப்பொலிவை, நிலத் தொன்மையை நிலத் தூய்மையை இழந்து விடுவோம்" என மனோஜ் சொன்ன போது அப்பாமரனின் சூழலியல் புரிதல் நெகிழ வைத்தது. ஜாகேஷ்வரின் இரவு அப்படி ஒரு அமைதி. வாசலுக்கு வெளியே ஓடும் ஜடகங்காவின் சலசலவென ஒலி மட்டுமே கேட்கும். குளிரென்பதால் அனேகமாக 7.30மணிக்கெல்லாம் ஊரே அப்படி ஒரு நிசப்தம். ஒவ்வொரு வேளையும் சப்பாத்தியும் சப்ஜியும்தான் ஆனாலும் அந்த சப்பாத்தியையும் சப்ஜியையும் சுவையாக கொடுக்கின்றனர்.குளிரில் காய்கறிகள் வேகாது என்பது உள்ளீட்ட அவர்களது சிரமத்தையும் பார்க்ககவேண்டும்.
ஆறு மணிக்கு கோவில் நடையை சாத்திவிடுகின்றனர் ஆறரை மணிக்கு அப்படி ஒரு இருட்டு ஊரை போர்த்திக்கொள்கிறது அதன் பிறகு ஆரம்பிக்கும் குளிர் விடியும் வரை யாரையும் தெருவில் நடமாடவிடாது காட்டில் கிடைக்கும் குச்சிகளையும் முதி்ர்ந்து விழுந்த மரங்களையும் விறகாகக்கொண்டு நெருப்பு மூட்டிக்கொண்டுதான் பேசமுடியும். அந்தக்குளிரிலும் இரவிலும் இசைக்கவி ரமணனின் இசையும் பாட்டும் சொற்பொழிவும் காதுக்கு ஆன்மீக விருந்து மனசுக்கு அருமருந்து. இசைக்கவி ரமணன் இன்று தமிழுலகம் கொண்டிருக்கும் மாபெரும் கொடை. அவர்தன் இந்த பயணத்தின் காரணி. இமயமலை உச்சியில் இருந்து "வெள்ளிப்பனி மலை மீது உலாவுவோம்" "எத்தனை கோடி இன்பம் வைத்தாய்" எனும் பாரதி பாடல்களையும், சிவனடிவாரத்தில் இருந்து சித்த மருத்துவத் தத்துவங்களையும், பிரபஞ்ச பிறப்பையும், சிவம், சிவன்,சைவம் பற்றியும் அளவளாவுவதும், அவை ஒவ்வொன்றிற்கும் குறளில் இருந்தும் பாரதியில் இருந்தும் அவர் எடுத்துக் கொடுத்த விளக்கங்கள் எல்லாம் சேர்ந்து இந்த ஜாகேஷ்வர் பயணம் ஆனந்தக்களிப்பையும் ஆர்ப்பரிக்காத அமைதியையும் மனதில் ஒருங்கே நிறுத்தியது.