சென்னையைச் சேர்ந்தவர் இசைக்கவி ரமணன்.பல்வேறு தலைப்புகளி்ல் மிக ஆழமாக இலக்கிய ரசனையுடன் பேசக்கூடியவர் அருமையாக கவிதை இயற்றி பாடக்கூடியவர். இவரது பாரதி யார்? நாடகம் உலகப்பிரசித்தம்.இமய மலை மீது அதீத பற்றும் பாசமும் கொண்டவர்.இமயமலைக்கு இதுவரை 33 முறை சென்றுள்ளார் இதில் கடந்த 23 வருடங்களில் ஜாகேஷ்வர் கோவிலுக்கு மட்டும் 23 முறை தனது மனைவி அனுராதாவுடன் சென்றுள்ளார்.ஒவ்வொரு முறை செல்லும் போதும் விருப்பம் உள்ள பக்தர்களை அழைத்துச் சென்று ஜாகேஷ்வர் அருள் பெறச்செய்பவர்.இந்த முறை நீங்கள் வாருங்களேன் உங்கள் கேமிராவிற்கு நல்ல தீனியும் மனதிற்கு ஒரு புதிய ஆன்மீக பலமும் கிடைக்கும் என்றார் அவரது அழைப்பை ஏற்று சென்று வந்தேன்.
உண்மையிலேயே இசைக்கவி ரமணன் ஒரு மகத்தான மனிதர்தான் அவர் சொன்னதை விட யாத்திரையின் போது சொல்லாமல் செய்த விஷயங்கள பலப்பல.எத்தனை வருடங்களானாலும் மனதைவிட்டு அகலாத அனுபவங்களை இந்த யாத்திரை தந்தது என்றால் அதற்கு அவரே காரணம்.
சென்னையில் இருந்து ஜெட் ஏர்வேஸ் விமானம் விமானம் வேங்கட மலையைத்தாண்டி விந்திய மலையை நோக்கி பறக்கிறது இரண்டரை மணி நேர பயணம்.தில்லியில் விமானம் மதியம் 2.15 க்கு தரையிறங்கியது.
அங்கு இருந்து தில்லி ரயில் நிலையத்திற்கு லக்கேஜ் குறைவாக இருந்தால் மெட்ரோ ரயிலில் செல்வது உத்தமம்.காரில் சென்றால் சென்னையின் டிராபிக் எல்லாம் ஒண்ணுமே இல்லை என்று சொல்லத்தக்க வகையிலான சகல வாகனங்களையும் கொண்ட நெரிசலான டிராபிக்கை கடந்து இரண்டு மணி நேர பயணத்திற்கு பிறகு ரயில் நிலையம் அடையலாம்.
அங்கு இருந்து காட்கோடமிற்கு மூன்று ரயில்கள் இயங்குகி்ன்றது இதில் இரவு 10:40ற்கு புறப்பட்டு மறுநாள் காலை ஐந்து மணியளவில் காட்கோடம் செல்லும் ரயிலில் சென்றால் அலுப்பு இருக்காது மேலும் பகலில் பல இடங்களை பார்த்துக்கொண்டே ஜாகேஷ்வர் சென்றடையலாம்.
காட்கோடம் ரயில் நிலையத்தில் விடியலில் இறங்கிய போதுதான் குளிர் என்றால் என்ன என்பது தெரிந்தது.ஸ்வெட்டர் மப்ளர் மங்கி கேப் வெதர் ஜாக்கெட் என்று அனைத்தையும் அணிந்தும் உடல் நடுங்கியது.
வழியில் விடியலில் கோஷி நதியின் அழகை பார்த்தபடியே டீ சாப்பிட ஏற்பாடு அந்த நேரத்திலும் சூடாய் பக்கோடா டீ போட்டு கொடுக்கின்றனர் அருமையாக இருந்தது சூழலும் சிற்றுண்டியும் அதே போல நீம் கரோலி பாபா கோவிலின் அருகே காலை உணவாக கிடைத்த ஆலு பரோட்டாவும்,நிம்பு சாறும் பிரமாதம் நெஞ்சிருக்கும் வரை நினைவிலிருக்கும்.
வழியில் பீமாதால் . "தால்" என்றால் ஏரி என பொருள். நைனிதால், நவதால் என ஏகப்பட்ட ஏரிகளை இயற்கை இங்கே கொடையாக வழங்கியிருக்கிறது.அந்த ஏரிகளை பிளாட் போடாமல் குப்பை கொட்டாமல் அசுத்த நீரை கலக்காமல் ஆக்ரமிக்காமல் அப்படியே அழகுற வைத்திருக்கின்றனர் தன்னை மதிக்கும் இந்த மனிதர்களுக்காக ஏரியும் வற்றாமல் வளங்குன்றாமல் அவர்களின் பொழுது போக்குமிடமாகவும் தண்ணீர் தரும் பிரதேசமாகவும் விளங்குகிறது.
பீமாதாலைக்கடந்து இன்னும் சில கிமீட்டர் போக காக்கடிகாட் எனும் கோஷி ஆற்றங்கரை கிராமம். விவேகனந்தர் அல்மேராவுக்கு செல்லும் வழியில் தங்கிய பகுதியாம்.ஆற்றியன் கரையையொட்டி அற்புதமாக அமைந்திருக்கிறது அவர் தங்கிய இடம். அங்கிருந்து மலை மீது வளைந்து வளைந்து சென்று கொண்டே இருந்தோம் ஒரு வளைவில் இசைக்கவி ரமணன் ‛ஜாகேஷ்வர் மஹராஜ் கி ஜெய்!’ என்று உரத்த குரலிட்டு உற்சாகமானார்.வாகனத்தை நிறுத்திவிட்டு அனைவரையும் இறங்கக் சொல்லி அவர் கைகாட்டி திசையில் பார்த்த போது மகிழ்ச்சியில் உறைந்து போனோம்.