திருவெற்றியூர் கோயிலில் நேர்த்திகடன் பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21நவ 2018 02:11
திருவாடானை:திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் நேர்த்திகடன் பொருட்களை அதிக விலைக்கு விற்பதால் பக்தர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருவாடானை அருகே திருவெற்றியூரில் பிரசித்தி பெற்ற பாகம்பிரியாள் கோயில் உள்ளது. வெள்ளி, செவ்வாய் நாட்களிலும், சித்திரை மற்றும் ஆடி மாதங்களில் நடைபெறும் திருவிழாக்களில் பல்லாயிரம் பக்தர்கள் கூடுவார்கள்.
நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், திருமணம், குழந்தை பாக்கியம் உட்பட பல்வேறு வேண்டுதல் நிறைவேற வேண்டி பக்தர்கள் நேர்த்திகடன் இருப்பது வழக்கம்.
வேண்டுதல் நிறைவேறிய பின் நேர்த்திக் கடன் செலுத்துவார்கள். இதற்கான நேர்த்திகடன் பொருட்களை அதிக விலைக்கு விற்பதால் சிரமம் அடைகின்றனர்.
பக்தர்கள் கூறுகையில், ஒரு கொத்து வேப்பிலை 10 ரூபாய், சிறிய உப்பு பாக்கெட் 10, வெள்ளி கண்மலர், நாகம் போன்றவை 50 முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் வெளிமாவட்ட பக்தர்கள் மிகவும் சிரமம் அடைவதாக தெரிவித்தனர். தேவஸ்தான அலுவலர்கள் கூறுகையில், நேர்த்திகடன் பொருட்கள் ஆண்டு தோறும் ஏலம் விடப்படுகிறது. இதில் கூடுதல் தொகைக்கு ஏலம் எடுக்கும் ஏலதாரர்கள் அதிகவிலைக்கு விற்பனை செய்கின்றனர். இது குறித்து ஏலம் எடுத்தவர்களிடம் அறிவுறுத்தப்படும், என்றனர்.