பதிவு செய்த நாள்
18
பிப்
2019
05:02
ஓசூர்: ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, பால் கம்பம் நடும் நிகழ்ச்சி நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தேர்ப்பேட்டை மலை மீதுள்ள மரகதாம்பிகை உடனுறை சந்திர சூடேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா, ஆண்டுதோறும் மார்ச் மாதம் வெகுவிமர்சையாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா வரும் மார்ச், 13 ல் துவங்கி, 27 வரை நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், 20 ல் நடக்க உள்ளது.
இதையொட்டி, நேற்று (பிப்., 17ல்) காலை தேர்பேட்டை சந்திர சூடேஸ்வரர் மண்டபம் முன், பால்கம்பம் நடும் நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மனோகரன், கோபிநாத், கோவில் செயல் அலுவலர் ராஜரத்தினம், முன்னாள் கவுன்சிலர் நாகராஜ், தேர்கமிட்டி நிர்வாகிகள் முன்னிலையில், பால் கம்பம் தேர் வீதியில் வலம் வந்து நடப்பட்டது. தொடர்ந்து, பூசாரி வாசு தலைமையில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தேர் கட்டும் பணிகள் துவங்கின.