மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கோடை வசந்த உற்ஸவம் மார்ச் 12ல் துவங்குகிறது. மார்ச் 21 பங்குனி உத்திரத்தன்று காலை 10:00 மணிக்கு மேல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பட்டு செல்லுார் திருவாப்புடையார் கோயிலில் எழுந்தருளி அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது.
மாலையில் சுந்தரேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்திலும், மீனாட்சியம்மன் மரவர்ண சப்பரத்திலும் எழுந்தருளி கோயில் வந்து பின் சன்னதி பேச்சிக்கால் மண்டபத்தில் பாதபிட்சாடணம் ஆகி தீபாராதனை முடிந்து சேத்தியாகும்.விழாவை முன்னிட்டு மார்ச் 12 முதல் 21 வரை கோயில், உபயதாரர்கள் சார்பாக அம்மன், சுவாமிக்கு தங்கரத உலா, உபய திருக்கல்யாணம் ஆகிய விசேஷங்கள் பதிவு செய்து நடத்திட இயலாது. ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்து வருகின்றனர்.