பதிவு செய்த நாள்
07
ஏப்
2019
01:04
மேல்மருவத்துார்: மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், யுகாதி - தெலுங்கு வருடப்பிறப்பு விழா, நேற்று நடந்தது.முன்னதாக, அதிகாலை, 3:00 மணிக்கு, மங்கள இசையுடன், ஆதிபராசக்தி அம்மனுக்கு, கருவறையில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.தொடர்ந்து, கோவிலுக்கு வந்த பங்காரு அடிகளாருக்கு, செவ்வாடை பக்தர்கள் வரவேற்பு அளித்தனர்.பின், ஆன்மிக மண்டபத்தில், ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர், லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில், துணைத்தலைவர், செந்தில்குமார் முன்னிலையில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.பங்காரு அடிகளார் பங்கேற்று, 45 பேருக்கு தையல் இயந்திரம், 20 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை என, 11 லட்சம் ரூபாய் மதிப்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.இதையடுத்து, ஆதிபராசக்தி அன்னையின், 108 அற்புதங்கள் அடங்கிய தெலுங்கு புத்தகத்தை, அடிகளார் வெளியிட, மண்டல பாஸ்போர்ட் அதிகாரி, டாக்டர் விஷ்ணுவர்த்தன் பெற்றுக்கொண்டார்.விழா ஏற்பாடுகளை, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில தலைவர்கள் கங்காதாரம், சரிதா, கலாதர் ஆகியோர் செய்திருந்தனர்.