திருப்பூர் : திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவிலில் மழை வேண்டி யாகம் நடந்தது.
மழை பெய்து, நீர் வளம் பெருக வலியுறுத்தி, அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு யாக பூஜை மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டன. தமிழகத்தில் பருவ மழை பொய்த்து போனதால், தற்போது கடும் வறட்சி நிலவுகிறது. நீர்நிலைகள் வறண்டு, குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால், பல்வேறு சமூக அமைப்பு சார்பில் மழை வேண்டி யாகம், வர்ண ஜெபம் ஆகியவை நடத்தப்படுகின்றன. அவ்வகையில், அறநிலையத்துறை சார்பில், தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில், மழை வேண்டி சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. அதன்படி, திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவிலில் மழை வேண்டி சிறப்பு யாகம், காலை நடந்தது. பொதுமக்களும் கலந்து கொண்டு மழை வேண்டி பிரார்த்தனையில் ஈடுப்பட்டனர்.